யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-03-03

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7,பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a),திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45)




பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?! பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?!


திருப்பலி முன்னுரை

பொதுக்காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் உண்மை நிலையை உணர்ந்து வாழ்ந்திட அழைப்பு விடுக்கிறது. பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல், நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம். தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

பேசுவதற்கு முன்பே மனிதரைப் புகழாதே
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 4-7

சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது; அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது. குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை, உரையாடல் பரிசோதிக்கப்படுகின்றது. கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே; பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
பதிலுரைப்பாடல்: திபா: 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி:1a)

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி

இரண்டாம் வாசகம்

மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 15:54-58

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: ;சாவு முற்றிலும் ஒழிந்தது: வெற்றி கிடைத்தது.சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே? ;பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்: நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். (பிலி 2: 15-16 காண்க) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 6: 39-45

மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ;பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.;நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ;உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? ; என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள்.அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். ;கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை: நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை: முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவ+லத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

துணிந்துச் செல். நான் உன்னோடு இருக்கிறேன் என்றுரைத்த எம் இறைவா!

திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்றுத் துணிவுடன் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உமது அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்துக் காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற சொற்களைப் பேச உமது தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்குத் தந்தருளும், எங்களது குறைகளோடு எங்களை ஏற்றுக்கொண்டு, எங்களோடு வாழ்கின்ற, பணி செய்கின்ற மனிதர்களில் குறைகளைக் காணாமல், நிறைகளையே பார்க்கின்ற புதிய பார்வையை எங்களுக்குத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா!

புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

விடுதலையின் நிறைவே இறைவா,

பலவிதமான உடல், உள்ள, ஆன்ம நோய்களால் வருந்தும் மக்களை கனிவுடன் கண்ணோக்கி, அவர்களுக்குத் தேவையான நற்சுகமும், புதுவாழ்வும் அளித்து பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள குடும்பம் என்னும் தோழமை உறவுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவரும் உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும், இறையுறவிலும், சமூக உறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், சிறந்து விளங்கி உமக்குகந்த குடும்பங்களாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே!இறைவா!

இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''முதலில் உங்கள் கண்களில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள்'' (லூக்கா 6:42)

நம்மில் இருக்கின்ற குறைகளை நாம் பெரிதாகக் கருதாமல் பிறருடைய குறைகளைப் பற்றியே அலட்டிக்கொள்வது ஓர் அனுபவ உண்மை. மனிதரிடையே நிலவும் இப்போக்கினை ஒரு சிறிய உவமை வழியாக விளக்குகிறார் இயேசு. நம் கண்கள் தெளிவாக இருந்தால்தான் நம் பார்வையும் தெளிவாக இருக்கும். கண்ணில் ஒரு சிறிய தூசு விழுந்தால்கூட கண் தானாகவே மூடிக்கொள்ளும்; அப்போது நம் பார்வையும் தெளிவு குன்றிவிடும். ஆனால் ஒரு பெரிய மரத்துண்டை எடுத்துக் கண்ணில் போட்டால் நம் பார்வை முற்றிலுமாக மறைந்துபோய் நாம் பார்வையற்றோர் போல ஆகிவிடுவோம். நமது பார்வை தெளிவாக இருக்கவேண்டும் என்றால் நம் கண் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம் கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையை அகற்றுவதுதான். நம் குறைகள் மரக்கட்டை போல இருந்து நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணராமல் இருக்கச் செய்துவிடக்கூடும். அதே நேரத்தில் பிறருடைய வாழ்வில் நிலவுகின்ற சிறுசிறு குறைகளை நாம் பெரிதுபடுத்துவதோடு கூட அவர்கள்மீது குறைகாணவும் தொடங்கிவிடுவோம். இதுவே பெரிய மரக்கட்டைக்கும் சிறிய துரும்புக்கும் இடையே உள்ள வேறுபாடு.

பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத் திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். அதைக் கண்டு அவர்களும் கடவுளிடம் திரும்புகின்ற வாய்ப்புப் பிறக்கலாம். எனவே, சகோதர அன்பின் ஒரு முக்கியமான அம்சம் நம் பகைவரையும் அன்புசெய்து, நம் சகோதரர் சகோதரிகளிடம் இன்னின்ன குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவதற்குச் செய்யப்படுகின்ற முயற்சி ஆகும். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப் பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல் நாம் தெளிந்த பார்வை உடைய மனிதராக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உண்மைநிலையை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.