யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் வெள்ளிக்கிழமை
2019-02-08




முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:1-8

1 சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.2 அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.3 சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.4 திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.5 பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன் என்று கடவுளே கூறியிருக்கிறார்.6 இதனால், நாம் துணிவோடு, ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்: மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்? என்று கூறலாம்.7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல்கள் 27:1,3,5,8-9

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்.

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.

5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.

8 'புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம்; ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும்.


நற்செய்திக்கு முன் வசனம்

சிலர், ' இவர் எலியா ' என்றனர். மற்றும் சிலர், ' ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே ' என்றனர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:14-29

14 இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ' இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ' என்றனர்.15 வேறு சிலர், ' இவர் எலியா ' என்றனர். மற்றும் சிலர், ' ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே ' என்றனர்.16 இதைக் கேட்ட ஏரோது, ' இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ' என்று கூறினான்.17 இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ' உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ' எனச் சொல்லிவந்தார்.19 அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை.20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.21 ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.22 அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ' உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் ' என்றான்.23 ' நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன் ' என்றும் ஆணையிட்டுக் கூறினான்.24 அவள் வெளியே சென்று, ' நான் என்ன கேட்கலாம் ? ' என்று தன்தாயை வினவினாள். அவள், ' திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள் ' என்றாள்.25 உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ' திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும் ' என்று கேட்டாள்.26 இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.27 உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,28 அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.29 இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், 'திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன' என்றனர்'' (மாற்கு 6:14-15)

அதிகாரத்தில் இருப்போர் சிலவேளைகளில் தங்களுக்கு ஏன் அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்றும், சட்டம் ஒழுங்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இறுமாப்புக் கொண்டுவிடுகிறார்கள். இதுவே ஏரோது அந்திப்பா என்னும் அரசனின் வாழ்விலும் நிகழ்ந்தது. திருமுழுக்கு யோவான் அரசனின் போக்குக்குச் சவால் விடுத்தார்; அரசனின் முறைகேடான வாழ்க்கையைக் கண்டித்தார். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது தவறு எனச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். உண்மை பேசிய யோவானுக்குக் கிடைத்த பரிசு கொலைத் தண்டனை.

யோவானின் வரலாற்றுக்கும் இயேசுவின் வரலாற்றுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. மாற்கு இதைத் தெளிவாகக் காட்டுகிறார். கடவுளாட்சி வந்துகொண்டிருக்கிறது எனவும் அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் யோவான் முழங்கினார். இயேசுவும் இறையாட்சி பற்றிய செய்தியை மக்களுக்குச் சொல்லாலும் செயலாலும் அறிவித்தார். யோவான் இருப்பதை விட இறப்பதே மேல் என முடிவுகட்டினாள் ஏரோதியா (மாற் 6:24). பிலாத்து என்னும் ஆட்சியாளனும் அதே முடிவெடுத்து இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்குவான். யோவான் இறந்ததும் அவருடைய சீடர்கள் அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள் (மாற் 6:29). இயேசு சிலுவையில் இறந்ததும் அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் அவருடைய உடலைக் கல்லறையில் கொண்டுவைத்தார் (மாற் 15:46). துன்பங்கள் வந்தாலும் சரி, ஏன் சாக வேண்டிய கட்டாயம் எழுந்தாலும் சரி, உண்மைக்குச் சான்று பகர்கின்ற பணியை ஊக்கத்தோடு செய்ய வேண்டும் என்று யோவான் முடிவுசெய்தார்; உயிர்துறந்தார். அதுபோலவே, இயேசுவும் இறுதிவரை உண்மைக்குச் சான்று பகர்ந்தார்; சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுவைப் பின்செல்கின்ற மக்களும் அதே வழியில் நடந்து சென்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உண்மைக்குச் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.