யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2019-01-25




முதல் வாசகம்

நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22:3-16

3 நான் ஒரு யூதன்: சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்: ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்: கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்: நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று நானும் கொண்டிருந்தேன்.4 கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைந்தேன்: சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன்.5 தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.6 நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழந்து வீசியது.7 நான் தரையில் விழுந்தேன். அப்போது, சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்ற குரலைக் கேட்டேன்.8 அப்போது நான், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்டேன். அவர், நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே என்றார்.9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்: ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்? என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும் என்றார்.11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடியிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.12 அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்: அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்.13 அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும் என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.14 அப்போது அவர், நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.15 ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும்.16 இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும் என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்
திருப்பாடல்கள் 117:1,2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!


நற்செய்திக்கு முன் வசனம்

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:15-18

15 இயேசு அவர்களை நோக்கி, ' உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்...நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்றார்'' (யோவான் 16:16,20)

இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்திய வேளையில் அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். விரைவில் தாம் இறக்கப் போவதை இயேசு முன்னறிவித்தார். எனவே, ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்'' என்று இயேசு கூறினார். இயேசுவைக் காணாமல் சீடர்கள் துயருறுவார்கள் என்பதும் அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. சீடர்கள் அனுபவித்த துயரம் சிறிது காலத்திற்கு மட்டுமே. எனவேதான் இயேசு அவர்களை நோக்கி, ''மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார். இது இயேசுவின் சாவுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்து, சீடர்களுக்குத் தோன்றுவார் என்னும் செய்தியின் முன்னறிவிப்பாயிற்று. ஆக, சீடர்கள் துயரப்படுவார்கள் என்பது உண்மையாயினும் அவர்களுடைய துயரம் ஒருநாள் மகிழ்ச்சியாக மாறும் என்பது அதைவிட அதிக உறுதியான உண்மை.

இயேசுவின் சீடர்களாக வாழ்கின்ற நமக்கும் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் பொருந்தும். அதாவது, இயேசுவை நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்களுக்குத் துன்ப துயரங்கள் வரும். அவர்களுடைய நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவர். அவர்களைத் துன்புறுத்துவோர் ஏதோ நல்ல காரியம் செய்வதுபோல நினைக்கக் கூடும். ஆனாவ் இத்துன்பமும் துயரமும் ''சிறிது காலம்'' மட்டுமே நீடிக்கும். ஏனென்றால் இயேசு தம் சீடர்களுக்கு மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவே வந்தார். அந்த மகிழ்ச்சி நம் மண்ணுலக வாழ்வுக்குப் பின் வருகின்ற விண்ணுலக வாழ்வைச் சார்ந்தது மட்டுமல்ல. இயேசு வாக்களிக்கின்ற மகிழ்ச்சி இவ்வுலகத்திலேயே தொடங்குகிறது என்பதே உண்மை. ஏனென்றால் இயேசு நம்மோடு வாழ்கின்றார். அவர் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரிந்து போய்விடவில்லை. இதை நாம் உண்மையாக நம்பினால் நம் உள்ளத்தில் துயருறுவதற்குத் தேவையில்லை. இயேசு நம்மைவிட்டு மறைந்ததுபோன்ற உணர்வு நம்மில் எழுந்தாலும் அது ''சிறிது காலம்'' மட்டுமே என நாம் அறிவோம். ஆக, இயேசுவின் சாவிலும் உயிர்த்தெழுதலிலும் பங்குபெறுவோர் இவ்வுலகிலேயே விண்ணகத்தின் முன்சுவையை அறிகின்றார்கள் எனலாம். நமக்கு வழங்கப்படுகின்ற மகிழ்ச்சி ஒருநாள் நிறைவுபெறும், முழுமையடையும் என்பது நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்ப துயரங்களின் நடுவிலும் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.