யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்துபிறப்புக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2018-12-26

புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி விழா




முதல் வாசகம்

இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, ``இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்'' என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், ``ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ``ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்'' என்று சொல்லி உயிர்விட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
திருப்பாடல் 31: 2-3. 5,7. 15-16

உன எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். 7யb உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். பல்லவி

15 என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். 16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: ``எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்

இறைபணியாளர்கள் பணிவாழ்வு எவ்வளவு கடினமானது என்தை இயேசு கூறுகிறார். ஆட்டுக்குட்டிகளுக்கிடையே ஓநாயை அனுப்பவது போல் அல்ல ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவது போல் என்கிறார். ஆட்டுக்குட்டிகள் என்ன பாடுபட வேண்டும்! கடித்துக் குதறி நார்நாராக்கிவிடும். ஆனால் எதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டாம், எந்த துன்பம் வந்தாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை என்கிறார். தேவையானது எல்லாம் கடவுளால் அருளப்பபடும் என்ற மனஉறுதியையும் கொடுக்கிறார். ஒன்றே ஒன்றை இறைபணியாளர்களிடம் எதிர்பார்கின்றார். இறுதி வரை நிலைத்து நிற்கவேண்டும். இந்த இறைவாக்குகள் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் கொடுத்ததல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் கொடுத்த இறைவாக்குகள். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வெதென்பது மிகவும் கடினமான ஒன்றுதான். இந்த அறநெறியில் வாழ்வது ஓநாய்கிடையே ஆட்டுக்குட்டிகள் படும் பாடாகத்தான் இருக்கும். பலர் இந்த கடினமான கிறிஸ்தவ வாழ்கை நெறியில் பலம் இன்றி தத்தளிப்பதையும் நெறியில் தடம் மாறுவதையும், தவறிப்போவதையும் கண்கூடாகக் காண்கிறோம் அல்லது நாமே அவ்வகையில் வாழ்ந்தும் இருக்கிறோம். இறுதிவரை நிலைத்து நின்றால் நிச்சயம் வெற்றிவாகை சூடுவோம் என்பதில் ஐயமில்லை. பலசூழ்நிலைகளில் நாம் கிறஸ்தவ நன் நெறியில் வாழ்வதற்கு தொடர்து முயற்சிப்பதில்லை. அன்பு இறைவா, உண்மையான கிறிஸ்தவ நெறியில் நாங்கள் வாழ்வதற்கு போதிய வலிமையயையும் ஆற்றலையும் எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எங்கள் பலகீனத்தால் தவறும் போது நீரே எம்மை கைதூக்கி நன்நெறியில் வழிநடத்தும். கிறிஸ்தவ வாழ்கை நெறியில் நாங்கள் மனவலிமையுடன் இறுதிவரை நிலைத்து நிற்க அருள்தாரும்.

மன்றாட்டு:

தொடக்கமும், முடிவுமான இறைவா, இந்த ஆண்டின் இறுதி நாளில் நன்றியோடு உம்மைப் போற்றுகிறேன். இந்த ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டீரெ, உடலுக்கும், உள்ளத்துக்கும் நலம் தந்தீரே. வெற்றிகளும், பெருமைகளும், ஆசிகளும் தந்தீரே, உமக்கு நன்றி. இந்த ஆண்டில் நான் செய்த தவறுகள், செய்யத் தவறிய நன்மைகளுக்காக வருந்துகிறேன். மன்னியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.