யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2018-12-22




முதல் வாசகம்

சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.
1 சாமு 2: 1. 4-5. 6-7. 8

ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.'' மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''செக்கரியாவும் அவர் மனைவி எலிசபெத்தும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள்... அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில் எலிசபெத்து கருவுறு இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்'' (லூக்கா 1:6-7)

கடவுளின் மீட்புத் திட்டத்தில் மனிதருக்கு முக்கிய பங்கு உண்டு. சில சமயங்களில் மனிதர் தம் பங்கை அளிக்கத் தயக்கம் காட்டுவார்கள். செக்கரியா என்னும் குரு அவ்வாறுதான் தயங்கினார். அவரும் அவருடைய மனைவி எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கப் போவதில்லை என முடிவுகட்டிவிட்டனர். இருந்தாலும் ஒருவேளை கடவுள் தங்கள் மன்றாட்டைக் கேட்கமாட்டாரா என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். எவ்வாறாயினும், கடவுள் தம் தூதர் கபிரியேலை அனுப்பி, செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் ஒரு மகன் பிறப்பான் என்று அறிவித்த வேளையில் செக்கரியா அச்செய்தியை நம்ப மறுக்கிறார். திருப்பீடத்தை அணுகிச் சென்று கடவுளுக்குப் பலிசெலுத்துகின்ற பேறு அவருக்கு இருந்த போதிலும், அந்நிலைக்குத் தம்மை அழைத்த கடவுளிடத்தில் செக்கரியாவுக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை.

நம் வாழ்விலும் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் கடவுள் தம் அருள்செயலை விளங்கச் செய்கின்ற தருணங்கள் உண்டு. அப்போது கடவுள் நம்மைத் தேடி வருகிறார், தம்மோடு ஒத்துழைக்க நம்மை அழைக்கிறார் என்பதை நாம் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். செக்கரியாவைப் போல நாம் தயக்கம் காண்பிக்கின்ற நேரங்கள் உண்டு. கடவுள் இவ்வாறு அதிசயமான விதத்தில் என் வழியாகச் செயல்பட முடியுமா என நாம் ஐயப்படக் கூடும். அத்தகைய ஐயப்பாடு நம்மில் இருத்தலாகாது என்பதை செக்கரியாவின் அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம். மனிதரால் சாதிக்க இயலாதது கடவுளின் வல்லமையால் நிறைவேறும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை நம்மில் வெளிப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் மாண்புடையவர்களே. எனவே கடவுள் நம்மை அணுகி வந்து அவரோடு இணைந்து செயல்பட நம்மை அழைக்கின்ற வேளைகளில் ''ஆம்'' என நாம் பதிலிறுக்க வேண்டும். இதில் மரியா நமக்கு முன்மாதிரியாக உள்ளார். வானதூதர் வழியாகத் தமக்கு வழங்கப்பட்ட செய்தியைச் செக்கரியா நம்ப மறுத்தார் (லூக் 1:20); ஆனால் மரியா கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்று, ''நான் ஆண்டவரின் அடிமை'' என்று கூறிப் பணிந்தார் (லூக் 1:38). இத்தகைய பணிவு நம்மிலும் துலங்கிட வேண்டும். தம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கின்ற பேற்றினை நமக்கு வழங்குகின்ற கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மீட்புத் திட்டத்தில் பங்கேற்று உம்மோடு ஒத்துழைக்க எங்களை அழைத்ததற்கு நன்றி!