யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2018-12-15




முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
திருப்பாடல்80: 1,2. 14-15. 17-18

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து, 'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்' என்றார்'' (மத்தேயு 17:20)

வலிப்பு நோயால் துன்புற்ற ஒரு சிறுவனின் தந்தை இயேசுவை அணுகுகிறார். தன் மகன் அனுபவித்த துன்பங்கள் பற்றியும், இயேசுவின் சீடரால் அச்சிறுவனைக் குணப்படுத்த இயலவில்லை என்பதையும் இயேசுவிடம் அவர் எடுத்துக் கூறுகிறார். கடவுளின் வல்லமையில் முழுமையான நம்பிக்கை இருந்தால் எந்த அதிசய செயலையும் செய்ய முடியும் என்றும், சீடரிடம் அத்தகைய நம்பிக்கை இல்லாததால்தான் அவர்களால் அச்சிறுவனைக் குணமாக்க முடியவில்லை எனவும் இயேசு கூறுகிறார். கடவுளை நாம் நம்பினால் எதையும் சாதிக்கலாம் என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார்.

இயேசுவை நாம் நம்பும்போது கடவுள் நம்மோடு இருந்து நம்மைத் திடப்படுத்துகிறார் என நாம் ஏற்றுக்கொள்கிறோம். கடவுளின் வல்லமை நம்மோடு இருக்கும்போது நம்மால் எதையும் சாதிக்கக் கூடும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கின்ற பாடங்கள் இரண்டு. மனிதர் அனைவருமே கடவுளின் படைப்புகள் என்பதால் அவர்கள் கடவுளின் வல்லமையோடுதான் எதையும் சாதிக்க இயலும். அதே நேரத்தில் அதிசய செயல்கள் நிகழ வேண்டும் என நாம் கடவுளை வேண்டும்போது நாம் எதிர்பார்க்கின்றவை நிகழாவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை என நாம் முடிவு செய்தல் சரியாகாது. ஏனென்றால் நாம் எதிர்பார்க்கின்றவை எல்லாம் நிகழும் என்பதும் சரியல்ல, நாம் நினைப்பதுபோல் நடக்காவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை என முடிவுசெய்வதும் சரியல்ல. மாறாக, நாம் கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். அதே நேரத்தில் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக நிகழ்கின்றவற்றையும் நாம் மன அமைதியோடு ஏற்கின்ற பக்குவத்தைப் பெற வேண்டும். அப்போது நாம் கடவுளிடம் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் வளரும்.

மன்றாட்டு:

இறைவா, இன்னல்கள் எழும்போதும் நாங்கள் உம்மையே நாடி வர அருள்தாரும்.