முதலாவது திருவழிபாடு ஆண்டு திருவருகைக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை 2018-12-11
முதல் வாசகம்
இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11
�ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்;
ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். �உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; �எதை நான் உரக்கக் கூற வேண்டும்?'' என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார்.
அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.
திருப்பாடல்96: 1-2. 3,10. 11-12. 13
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' பல்லவி
11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி
13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார்
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?
அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)
சிறு குழந்தைகளை இயேசு அன்போடு வரவேற்றார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உண்டு. குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத அக்காலத்தில் உண்மையான சீடர் குழந்தையைப் போல மாற வேண்டும் என்று இயேசு கேட்டது வியப்பாகத் தோன்றலாம். குழந்தைகள் தம் பெற்றோரையோ வேறு பெரியவர்களையோ சார்ந்துதான் வாழ முடியும். அவர்களுடைய நலமான வளர்ச்சிக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் தேவை. சீடரும் சிறுபிள்ளைகளைப் போல இருக்க வேண்டும் என்பது அவர்கள் கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் எனப் பொருள்படும். கடவுளைச் சார்ந்துதான் நம்மால் வாழ முடியுமே ஒழிய, நம் சொந்த சக்தியால் நாம் எதையும் சாதிக்க இயலாது. எனவே, கடவுளின் அரசில் நாம் பங்குபெற வேண்டும் என்றால் நாமும் கடவுளின்முன் சிறுபிள்ளைகளைப் போல மாற வேண்டும். இவ்வாறு இயேசுவின் சீடராக மாறுகின்றவர்கள் நன்னெறியில் நடக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர்களுக்கு யாதொரு தீங்கும் ஏற்படலாகாது என்பதில் கடவுள் கருத்தாயிருக்கிறார்.
சிறு பிள்ளைகளைப் போல நாமும் கடவுளை அணுகிச் செல்லும்போது நமது மன நிலை மாற்றம் பெற வேண்டும். கடவுளையே முழுமையாக நம்பி நாம் வாழும்போது நமது சொந்த விருப்பப்படி நடவாமல் கடவுளின் விருப்பப்படி நடக்க நாம் முயல்வோம். அதுபோலவே, பிறரும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருக்க நாம் அவர்களுக்குத் துணை செய்வோம். தவறிப்போன ஆட்டினைத் தேடிச் சென்று கண்டுபிடிக்கின்ற ஆயரைப் போல நம் கடவுளும் நம்மைத் தேடி வருகின்றார். அவரது அன்பிலிருந்து அகன்று சென்றுவிடாமல் நாம் அவர் காட்டுகின்ற வழியில் எந்நாளும் நடந்திட வேண்டும். அப்போது இயேசுவின் உண்மையான சீடராக நாம் வாழ்வோம்.
மன்றாட்டு:
இறைவா, சிறு பிள்ளைகளின் உள்ளத்தோடு உம்மையே எந்நாளும் நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
|