யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2018-12-05




முதல் வாசகம்

ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: �இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'' ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
திருப்பாடல்23: 1-3. 5-6.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். இயேசு தம் சீடரை வரவழைத்து, �நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்'' என்று கூறினார். அதற்குச் சீடர்கள் அவரிடம், �இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, �உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார். அவர்கள், �ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன'' என்றார்கள். தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' (மத்தேயு 15:32)

இயேசு நாலாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்த நிகழ்ச்சியை மத்தேயுவும் மாற்கும் விவரிக்கின்றனர். இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இன்னொரு நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளருமே குறிப்பிடுகின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியின் இரு வடிவங்களா அல்லது இரு வேறுபட்ட நிகழ்ச்சிகளா என்பது பற்றித் தெளிவு இல்லை. ஆனால் இயேசு பசியால் வாடிய மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு கொடுத்தார் என்னும் செய்தியை எல்லா நற்செய்தியாளரும் குறிப்பிடுவது கருதத் தக்கது. இந்த அதிசய நிகழ்ச்சியை விளக்குகின்ற முறைகள் வேறுபடலாம். ஆனால் கடவுள் இயேசுவின் வழியாகத் தம் மக்களுக்கு இரக்கம் காட்டினார் என்னும் உண்மையை இந்நிகழ்ச்சி தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. இயேசு மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொண்டார் (காண்க: மத் 15:32; 14:14; மாற் 8:2; 6:34; லூக் 9:13; யோவா 6:5). பசியால் வாடிய மக்களுக்கு உணவளிக்க முன்வந்த இயேசு கடவுளின் இரக்கத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் தம் மக்களுக்கு மன்னா உணவை வானிலிருந்து பொழியச் செய்தார். மோசே வழியாகக் கடவுள் தம் மக்களுக்கு உணவளித்ததுபோல இப்போது இயேசு என்னும் இணையற்ற இறைவாக்கினர் வழியாகத் தம் பரிவிரக்கத்தை வெளிப்படுத்துகிறார். பசித்தோருக்கு உணவுகொடுத்தல் மிகச் சிறந்த பிறரன்புப் பணி என யாவரும் ஏற்பர். ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்பது தமிழ்ப் பண்பாடு. இன்றைய உலகில் பசியால் வாடுவோர் பலருண்டு. அவர்களுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? இயேசுவின் சீடர்களுக்கு இதில் ஒரு தனிப்பட்ட பொறுப்பு உண்டு. ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (காண்க: மத் 25:35) என மானிட மகன் கூறப்போகும் சொற்கள் மனிதரின் தேவைகள் கடவுளின் தேவைகளே எனக் காட்டுகின்றன. உண்மையான இறையன்பு பிறரன்பாகப் பிறப்பெடுக்கும் என்பதே எதார்த்தம். பிறருக்கு வாழ்வளிக்கும் பொறுப்பை மறந்துவிட்டு மனித உயிர்களை அழித்து மாய்க்கின்ற பயங்கர வாதம் இன்று தலைதூக்குகிறது. ஒரு சில நாள்களுக்கு முன் (நவம்பர் 26, 2008) மும்பை நகரில் தாஜ; மற்றும் ஓபராய் சொகுசு விடுதிகள், இரயில் நிலையம், மருத்துவ மனை போன்ற பொது இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான நூற்றுக் கணக்கான மக்களை இவண் நினைத்துப் பார்க்கின்றோம். வன்முறையால் அப்பாவி மக்களின் உள்ளத்தில் பயத்தைக் கிளப்பிவிட்டுத் தங்கள் குறுகிய அரசியல் குறிக்கோள்களை அடைந்துவிடத் துடிக்கின்ற தீவிர வாதக் குழுக்கள் அன்பு என்னும் நற்பண்பை எள்ளளவும் மதித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் நாம் அனைவரும் செவிமடுக்கவேண்டிய இயேசுவின் கூற்று: ''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' என்பதே (காண்க: மத் 15:32).

மன்றாட்டு:

இறைவா, பல விதத் தேவைகள் நடுவே வருந்துகின்ற மக்கள்மீது நாங்கள் பரிவு கொண்டு உதவிட எங்களுக்கு அருள்தாரும்.