யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் சனிக்கிழமை
2018-12-01




முதல் வாசகம்

இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 22: 1-7

வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். பின்னர் அந்த வானதூதர் என்னிடம், ``இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்'' என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
திருப்பாடல் 95: 1-2. 3-5. 6-7

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். 4 பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும்.ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

“உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தால் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்”

மது அல்லது குடிவெறி எவ்வளவு கொடியது என்பதை விளக்க அரபுநாடுகளிலே சொல்லப்படுகின்ற ஒரு கதை. ஒருசமயம் இளைஞன் ஒருவன் காட்டுவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தான். அது ஆள் அரவம் இல்லாத காடு. ஒரு திருப்பத்தில் அவன் திரும்பியபோது, பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். இந்த நட்ட நடுக்காட்டில் எப்படி இந்தப் பெண்மணியால் தனியாக நடந்துவர முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். அவன் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு முன்பாக சாத்தான் தோன்றியது. அதைப் பார்த்ததும் அவன் திடுக்கிட்டான். அப்போது சாத்தான் அவனிடம், “இப்போது நீ மூன்று பாவங்களில் ஒன்றைச் செய்யவேண்டும்” என்றது. “மூன்று பாவங்களா? அவை என்னென்ன?” என்று வியப்பு மேலிடக் கேட்டான் இளைஞன். உடனே சாத்தான் அவனிடம், “ஒன்று, இந்தப் பெண்ணைக் கெடுக்கவேண்டும், இரண்டு, இந்தப் பெண்ணின் கையிலுள்ள குழந்தையைக் கொல்லவேண்டும், மூன்று, என் கையில் உள்ள இந்த மதுபானத்தைக் குடிக்கவேண்டும். இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் செய்தாகவேண்டும். இல்லையென்றால் நான் உன்னை அடித்தே கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியது. இளைஞன் ஒருகணம் யோசித்தான். பெண்ணைக் கெடுப்பது பெரிய பாவம், அதைவிடவும் அவளுடைய கையிலுள்ள குழந்தையைக் கொல்வது மிகப்பெரிய பாவம். மதுபானத்தைக் குடிப்பதுதான் இருப்பதிலே சிறிய பாவம் என யோசித்துவிட்டு, சாத்தானின் கையில் இருந்த மதுபானத்தை வாங்கி மடமடவெனக் குடித்தான். அவன் மதுபானத்தைக் குடித்த மறுகணம் போதை தலைக்கேறியது. அதனால் அவன், தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல், அந்த பெண்மணியைப் பிடித்து, அவளுடைய வாழ்வை சீரழித்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தையைப் பிடித்து இழுத்து, அருகில் கிடந்த கல்லில் ஓங்கி ஒரு அடி அடித்துக் கொன்றே போட்டான். அவன் குழந்தையைக் கொன்றபின்தான் தெரிந்தது தான் செய்தது எல்லாம், மகா மகாப் பாவங்கள் என்று. அவன் தன்னுடைய தவற்றுக்காக கண்ணீர் விட்டு அழுதான். அப்போது சாத்தான் மீண்டுமாக அவனுக்கு முன்பாகத் தோன்றி, “நான் உன்னை மகாப் பாவியாக்க நினைத்தேன், அதனால்தான் இந்த மதுவைக் கையில் எடுத்தேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனது. மதுவும் குடிவெறியும் மனிதன் செய்யக்கூடிய எல்லாப் பாவங்களுக்கும் அடிநாதமாக இருக்கின்றது என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு, அந்நாள் திடிரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்கின்றார். மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும் இயேசு, அவருடைய வருகை எந்நேரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகவே, அதற்காக தயார் நிலையில் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கூறுகின்றார். மானிட மகனுடைய வருகையின்போது, நாம் தயார்நிலையில் இருப்பதற்கு குடிவெறி, களியாட்டம், உலகப் போக்கிலான வாழ்க்கை குறித்த கவலைகள் எல்லாம் தடையாக இருக்கலாம். அதனால்தான் இயேசு, இதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார். நோவாவின் காலத்தில் மக்கள் உண்டும் குடித்தும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்தும் கடவுளையே மறந்துநின்றார்கள். அதனால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நோவாவின் குடும்பம் தவிர மற்ற எல்லாரும் அழிந்துபோனார்கள். நாமும் அப்படி அழிந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு நம்மை எச்சரிக்கின்றார். ஆனால், இன்றைக்கு தமிழகத்திலும் சரி, உலகெங்கிலும் சரி, பெரும்பாலோர் போதைக்கு அடிமையாகி இருபதைக் காணமுடிகின்றது. தமிழகத்தில் ஒருகாலத்தில், அரசாங்கம் கல்வியைத் தந்தது, தனியாரோ சாராயம் தந்தது. ஆனால், இன்றைக்கு தனியார் கல்வியையும் அரசாங்கம் சாராயத்தையும் தந்துகொண்டிருக்கும் அவலநிலைதான் இருக்கின்றது. சாராயத்தை அரசாங்கமே கையில் எடுத்தால்தான் எங்கும் குற்றங்கள் மலிந்துவிட்டன. இத்தகைய ஒரு இழிபிழைப்பிலிருந்து மக்கள் விழித்துக் கொள்வது எப்போதோ?. மானிடமகனுடைய வருகைக்காக தயார்நிலையில் இருக்கச் சொல்லும் இயேசு, விழித்திருந்து மன்றாடுங்கள் என்றும் சொல்கின்றார். ஆம், ஜெபம்தான் நம்மை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காக்கவல்ல ஓர் அற்புத ஆயுதம். ஆகவே, உலகப் போக்கிலான வாழ்க்கையில் மூழ்கிப்போகாமால், இறைவனிடம் எப்போதும் விழித்திருந்து ஜெபிப்போம். மானிட மகனுடைய வருகைக்காக எப்போதும் தயார்நிலையில் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மன்றாட்டு:

எங்கள் அன்பான ஆண்டவரே! உம் அன்னை உம்மோடு உமது இறுதி சாவு வரை உடனிருந்து வழிநடத்தியதைப்போல அரசி பிளாங்காவையும் தன் மகனுக்கு உதவி செய்ய வழிகாட்டினீர். உமது அன்பான பராமரிப்பினால் எம் தாய்மார்களையும் ஆசீர்வதித்து, இறுதிவரை உடனிருந்து தன் பிள்ளைகளுக்கு உதவிட வரம் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.