யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-11-30

புனித அந்திரேயா - திருத்தூதர் விழா0




முதல் வாசகம்

அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18

சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது..
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். � இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று இயேசு கூறினார்'' (மாற்கு 1:15)

இயேசு வழங்கிய போதனையின் மையக் கருத்தைச் சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால் அது ''இறையாட்சி'' என்னும் ஒரு சொல்லில் அடங்கும் எனலாம். கடவுளின் ஆட்சி பற்றியே இயேசு பேசினார். என்றாலும் இதுதான் கடவுளின் ஆட்சி என்று ஓரிரு சொற்களில் விளக்கிட இயலாது. இயேசு கடவுளாட்சி பற்றி வெவ்வேறு கோணங்களிலிருந்து போதித்தார். கடவுளாட்சி எதில் அடங்கியிருக்கிறது? அந்த ஆட்சியில் பங்கேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுள் நம்மைத் தம் ஆட்சியில் எவ்வாறு ஏற்கின்றார்? கடவுளாட்சியை நாம் எங்கே கண்டுகொள்வது? அதற்கான விவிலிய அடிப்படைகள் என்ன? - இத்தகைய பல கேள்விகளுக்கும் நாம் பதில் காண முனைந்தால் விவிலியம் நமக்குத் துணையாக அமையும். இயேசு கடவுளின் ஆட்சியை மன மாற்றத்தோடு இணைத்துப் பேசுவது கருதத் தக்கது. மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பது இறையாட்சியில் பங்கேற்க முதல் நிபந்தனை ஆகும். மன மாற்றம் என்பது நம் உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த புரட்சியை ஏற்படுத்துவதாக அமையும். இதுவரை நாம் எந்த சிந்தனைப் பாணியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தோமோ அதை அடியோடு மாற்றியமைத்து ஒரு புதிய சிந்தனைப் பாணியை, கடவுளின் சிந்தனைப் பாணியை, நமதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது இறையாட்சியில் நாம் பங்கேற்போம்.

கடவுளின் சிந்தனை எதில் அடங்கும்? இக்கேள்விக்கான பதில் இயேசுவின் வாழ்க்கை முழுவதிலும் துலங்குகிறது. இயேசு கூறிய சொற்கள், அவர் புரிந்த செயல்கள், அவர் ஆற்றிய புதுமைகள், அவரது வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற அனைத்தும் கடவுளின் ஆட்சி யாது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. எனவே, கடவுளின் ஆட்சி மனித வாழ்க்கையைக் கடவுளுக்கு உகந்த விதத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இத்தகைய வாழ்க்கை இவ்வுலகில் தொடங்கி மறுமையில்தான் நிறைவுறும். அப்போது இறையாட்சியின் முழுமையும் வெளிப்படும். இயேசு நம்மிடம் கோருகின்ற மன மாற்றம் இன்றே இப்போதே நிகழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சி வருக!