யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் வியாழக்கிழமை
2018-11-29




முதல் வாசகம்

பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய்.
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9

சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: ``வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.'' பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: ``பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது.'' இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: ``அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.'' மீண்டும் அந்த மக்கள், ``அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது'' என்றார்கள். அந்த வானதூதர் என்னிடம், `` `ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது'' என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்100: 1-2. 3. 4. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

“அப்போது யூதாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்”

2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற மதக் கலவரத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், ஜாலேஸ்பட் (Jalespate) என்ற நகரில் இருந்த லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்ற மதவெறியனை யாரோ ஒரு மர்ம நபர் கொன்றுபோட்டுவிட்டார். அவனைக் கொன்றது கிறிஸ்தவர்கள்தான் என நினைத்துகொண்டு இந்து மத வெறியர்கள் கந்தமால் மாவட்டம் முழுவதும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டார்கள். ஆகஸ்ட் 24 ஆம் நாள், அதாவது லக்ஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்ட மறுதினம், அவனுடைய உடலை வானகத்தில் தூக்கிக்கொண்டு, அவனுடைய சொந்த ஊரான ரைக்காவில் (Raika) புதைக்க வைத்தார்கள். வரும் வழியெங்கும் அவர்கள், எங்கெல்லாம் கிறிஸ்தவர்களுடைய வீடுகள், கடைகள், ஆலயங்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் தீக்கிரையாக்கிப் போட்டுக்கொண்டு வந்தார்கள்; கண்ணில் பட்ட கிறிஸ்தவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மாலை 6 மணிக்கு லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் உடல் ரைக்காவை வந்தடைந்தது. அவனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டு, அங்கிருந்த கிறிஸ்தவ இல்லங்களையும் அவர்களுடைய கடைகளையும் தீயிட்டுக் கொளுத்தத் தொடங்கினார்கள். ரைக்காவில் மிகப்பெரிய தேவாலயம் ஒன்று இருந்தது. அதற்குள்ளே புகுந்த மதவெறியர்கள், அங்கிருந்த நற்கருணைப் பேழையையும் சிரூபங்களையும் உடைத்துப் போட்டு ஆலயத்திற்குத் தீ வைத்தார்கள். இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்து ரைக்காவில் இருந்த கிறிஸ்தவர்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துகொண்டார்கள். ஆனால் ரைக்காவில் பள்ளிக்கூடமும் விடுதியும் அனாதை இல்லமும் நடத்தி வந்த தூய வின்சென்ட் தே பவுல் சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் (Daughters of charity of St. Vincent de paul) விடுதியில் உள்ள பிள்ளைகளையும் அனாதைகளையும் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் காட்டுக்குள் ஓடி, தப்பித்துக்கொள்வது நல்லதல்ல என்று, மடத்திற்குள்ளாகவே இருந்து, நற்கருணை ஆண்டவரிடம் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக அவர்களை பயம் அதிகமாகத் தொற்றிக்கொண்டது. அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக உருக்கமாக வேண்டி வந்தார்கள். இரவு 12 மணி இருக்கும். மதவெறிக் குப்பல் கன்னியர் மடத்தில் உள்ள கன்னியர்களைப் பிடித்துக் கொல்வதற்காக கொலை வெறியோடு கன்னியர் மடத்தின் வாசலை நெருங்கியது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவன், “கதவின் வெளிப்பக்கம் பூட்டுப்போட்டிருக்கிறது, அதனால் உள்ளே யாரும் இருப்பதற்கு வாய்ப்பில்லை, எல்லாரும் பயந்து ஓடிவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்றான். அவன் சொன்னதை மற்றவர்கள் ஆமோதிப்பதுபோல், “ஆமாம், அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். அதனால் திரும்பி விடுவோம்” என்று திரும்பிப் போனார்கள். எல்லாவற்றையும் சிற்றாலயத்தினுள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த அருட்சகோதர்கள், “நற்கருணை ஆண்டவர்தான் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார்” என்று அவருக்கு செலுத்தித் தொடங்கினார்கள். உயிருக்கு ஆபத்து வந்த வேளையில், ரைக்காவில் இருந்த அருட்சகோதரிகள் நற்கருணை ஆண்டவரின் துணையை நாடியதால் காப்பாற்றப்பட்டார்கள் என்ற செய்தி, உண்மையில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நகருக்கு நேர இருந்த அழிவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அப்படிக் குறிப்பிடும் அவர் சொல்லக்கூடிய, “யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்” என்ற வார்த்தையை மட்டும் நம்முடைய இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

மன்றாட்டு:

இரக்கமே உருவான இறைவா! தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும்.