யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-11-18

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3,திருப்பாடல்16: 5,8. 9-10. 11,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32)




நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.


திருப்பலி முன்னுரை

இயேசுகிறிஸ்துவின் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இன்று திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு. வரும் ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. எனவே இன்றைய வாசகங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி இருக்கின்றது. இவ்வாசகங்கள் நமக்கு அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் உலகத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியை விடுத்து உலகத்தின் முடிவை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும்? என்று கேள்விக்கு விடையாகத் தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு அமைந்துள்ளது. திரைப்படம், புதினம் இவற்றின் முடிவே நம் ஆர்வமாக இருக்கிறது என்றால், நாம் வாழும் இந்த உலகின் முடிவு எப்படி இருக்கும். பார்ப்பதிலும், நினைத்துப் பார்ப்பதிலும் நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்! உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? இப்படியாக நம்முடைய கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா? இந்த நிலையில் தான் இன்றைய மாற்கு நற்செய்தி வாசகம் மூன்று கருத்துகளை நம்முன் வைக்கிறது.

1 நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.

2 கடின உழைப்பு.

3. சான்று வாழ்வு.

நம் இன்றைய வாழ்வை நன்றாக வாழ்வோம். நாம் நல்லவர்களாயினும், கெட்டவர்களாயினும் நம்மை விரும்பி தேர்ந்துகொள்வது கடவுளின் உரிமையே. அப்படியென்றால், நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும். உலக முடிவைப் பற்றிய கலக்கம் கொள்ளாமல் இன்றைய வாழ்வு நன்றாக வாழ்ந்தால், நாளை நமக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்து அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.



முதல் வாசகம்

உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றம் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல்16: 5,8. 9-10. 11

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி 9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி 11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்கு கூறியது: அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். "அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. "ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபைக்காக:

எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர்கால கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:

எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக தேர்ந்துக் கொள்ளப்படவும், மற்றவர்களுக்கு உம் அன்பினை பறைச்சாற்றும் வாழ்வதின் மூலம் உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களை தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

மக்களுக்காக:

வாழ்வின் வழியை அறியச் செய்யும் தந்தையே இறைவா! பொய்யானதும், அச்மூட்டுகின்றதுமான செய்திகள் எம்மை வந்தடைந்து எம்மை நிலைகுலையச் செய்யும் இந்நாட்களில், நாம் அனைவரும் விசுவாசத்தோடும், விழிப்புணர்வோடும் செயற்பட்டு உமது வருப்பப்படி வாழ்வதற்கான சக்தியை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா!

மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா!

எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது'' (மாற்கு 13:32)

நிறைவுக் காலம் பற்றி இயேசு தம் சீடர்களுக்கு எடுத்துக் கூறினார். கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். நிறைவுக் காலம் எப்போது நிகழும் என்னும் கேள்விக்குப் பதில் தராததால் இயேசுவிடம் குறை நிலவியது என நாம் முடிவுசெய்யலாமா? இயேசு பாவம் தவிர மற்று அனைத்திலும் நம்மைப் போல் ஒருவரானார் என்பது உண்மையென்றால் மனிதப் பண்பில் அவர் முழுமையாகப் பங்கேற்றார் என்பதே பொருள் (காண்க: எபி 4:15). இயேசு நம்மோடு தம்மையே முற்றிலுமாக ஒன்றித்துக் கொண்டதால் அவர் நம் நிலையைத் தமதாக்கினார். அதை ஒரு விதத்தில் இறைநிலைக்கு உயர்த்தினார்.

என்றாலும் அவர் அறியாதவை இருந்தன என்று ஏற்றுக்கொள்ள நாம் தயங்கக் கூடும். மனிதர் என்னும் முறையில் அவர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் இறைஞானமும் அறிவும் கொண்டவராக இருந்தாலும் உண்மையிலேயே மனிதராகவும் இருப்பதால் நம்மைப் போல அவரும் அறிவில் வளர்ந்தார். எப்போது நிறைவுக் காலம் வரும் என்பதற்கு இயேசு தரும் பதில் என்ன? நம் வாழ்வில் எந்த நேரத்திலும் இறுதிக் காலம் வரலாம். அது நாம் சாகும் தருணமாக அமையும் என்பது ஒரு பொருள். அதேபோல, நம் தலைமுறையும் தொடர்ந்து பல தலைமுறைகளும் மறைந்துபோகும் என்பது வரலாற்று நியதி. ஆனால் இன்று உயிர்வாழ்கின்ற நாம் இயேசு தொடங்கிவைத்த இறையாட்சி நம்மிடையே உள்ளது என்னும் உணர்வோடு வாழ அழைக்கப்படுகிறோம். வானமும் வானத்துக் கோள்களும் அதிர்ந்து, இடம் பெயர்ந்தாலும் அந்த அதிர்ச்சி நம் உள்ளத்தில் எதிரொலிப்பதுதான். அங்கே நாம் கடவுளைச் சந்திக்கின்றோம். நம்மை நிலை வாழ்வுக்கு அழைக்கும் நம் கடவுள் தமக்கே உரிய காலத்தில், விதத்தில் நம்மை மாட்சிமைப்படுத்துவார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கை வீண் போகாது.

மன்றாட்டு:

இறைவா, நிறைவு நோக்கி எங்களை நீர் வழிநடத்துகிறீர் என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.