யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-11-16




முதல் வாசகம்

போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4-9

தேர்தெடுக்கப்பட்ட பெருமாட்டியே, தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன். பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை. நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது. அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள். ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள். கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப் போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 119: 1,2. 10,11. 17,18 (

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி

10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். 11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். பல்லவி

17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர். நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.'' அவர்கள் இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, இது எங்கே நிகழும்?'' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ``பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உண்டார்கள், குடித்தார்கள் !

நோவாவின் காலத்திலும், லோத்தின் காலத்திலும் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டும் இயேசு, வரலாற்றிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் இறையச்சம் இன்றி உண்டும், குடித்தும் வந்தார்கள். லோத்தின் காலத்திலும் இறைவனின் கட்டளைகளை மக்கள் மறந்தார்கள். உண்டார்கள், குடித்தார்கள். வாங்கினார்கள், விற்றார்கள். நட்டார்கள், கட்டினார்கள். அதாவது, இந்த உலகின் செயல்பாடுகளிலேயே கவனமாக இருந்தார்கள், ஆனால், விண்ணக வாழ்வுக்குரிய செயல்பாடுகளை மறந்தார்கள் அல்லது புறக்கணித்தார்கள். எனவே, அழிந்தார்கள். எனவே, எச்சரி;க்கையாயிருங்கள் என்கிறார் இயேசு.

இந்த 21ஆம் நூற்றாண்டில் பழைய காலத் தவறுகளையே நாம் மீண்டும் செய்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது காலத்திலும் மக்கள் அலுவலகம் செல்வதிலும், பணம் சம்பாதிப்பதிலும், கடன் வாங்கி வீடு கட்டுவதிலும், வணிகம் செய்வதிலும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கும் நேரமும், அக்கறையும் இறைவனுக்குரிய , இறையாட்சிக்குரியவற்றில் செலவழிப்பதில்லை. எனவே, நோவாவின் காலத்தில் நடைபெற்றது போல, லோத்தின் காலத்தில் நடைபெற்றது போல, அழிவுக்குரிய செயல்கள் நமக்கும் நடக்கின்றன. புதிது புதிதாகத் தோன்றுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள், உலகம் சூடாதல் போன்ற சுற்றுச்சூழல் சிக்கல்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற தீமைகள் அனைத்தும் நம்மைச் சூழ்கின்றன. எனவே, தன்னலம் மிக்க செயல்களில் மட்டுமே ஈடுபடாது, உலகம் உய்வதற்கான செயல்பாடுகளிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

மன்றாட்டு:

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். கடந்த காலத் தவறுகளிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ளவும், இறையச்சம் மிக்கவர்களாக, பிறர் நலப் பணிகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.