யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் திங்கட்கிழமை
2018-11-05




முதல் வாசகம்

ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-4

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும்.
திருப்பாடல்131: 1. 2. 3

ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ``நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

''நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடன் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்'' (லூக்கா 14:13)

இறந்தோர் நினைவாக விருந்து கொடுப்பது பொருள்செறிந்த ஒரு பழக்கம். அப்போது ''புண்ணிய ஆத்மாக்களை'' அழைக்கவேண்டும் என்று உண்மையிலேயே ஊரிலுள்ள ஏழை எளிய மக்களை அழைத்து, அவர்களை அன்போடு வரவேற்றுப் பந்தியமர்த்தி, ''அசனம் கொடுத்து'' உபசரித்து, அவர்களுக்குப் புதிய உடைகளையும் அளித்து வழியனுப்புவது தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே வழக்கத்தில் உண்டு. இந்த நிகழ்ச்சியின் உட்பொருளைப் பார்த்தால் இயேசு யார்யாரைப் பந்திக்கு அழைப்பது என்பது பற்றிக் கூறிய உவமையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம். நாம் செய்கின்ற நல்ல செயல்களுக்கு நன்றி செலுத்துகின்ற விதத்தில் பிறர் நமக்குக் கைம்மாறு செய்கின்ற நேரங்கள் உண்டு. ஆனால், எந்தவொரு கைம்மாற்றையும் எதிர்பாராமல் நன்மையை நன்மையின்பொருட்டே நாம் செய்வதுதான் பொருளுடைத்தது என இயேசு நமக்குக் கற்பிக்கின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழைகளுக்கும் ஊனமுற்ற மக்களுக்கும் மதிப்பு இருக்கவில்லை. அவர்களுடைய இழிநிலைக்குக் காரணம் அவர்களுடைய பாவமே என்றொரு தவறான கருத்தும் நிலவியது. ஆனால் இயேசுவின் பார்வை அதுவன்று. பிறருக்கு இயல்பாகவே விளைகின்ற தீங்குகள் அவர்களுடைய பாவத்தின் விளைவே என நாம் முடிவுசெய்வதும் தவறு, அம்முடிவின் அடிப்படையில் நம்மையே நாம் உயர்த்தி எண்ணுவதும் தவறு எனவும் இயேசு காட்டுகின்றார். மனிதர் புரிகின்ற நற்செயல்களுக்கான கைம்மாறு இவ்வுலகிலேயே கிடைத்துவிடுவதில்லை; ஏனென்றால், கடவுள் அவசரப்பட்டுச் செயல்படுவரல்ல, அவர் மிகுந்த பொறுமையுடையவர். எனவே, நல்லதும் தீயதும் தம் விளைவைக் கொணர்வதற்குக் காலம் பிடிக்கலாம். ஆனால் நல்லது செய்வோர் தமக்கு நல்லதே விளையும் என்னும் நம்பிக்கையினின்று தளர்ந்துபோகலாகாது என இயேசு நமக்கு உணர்த்துகின்றார். கைம்மாறு கருதாமல் உதவுவதற்கு மழையை உருவமாகக் காட்டுவார் வள்ளுவர்: ''கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு'' (குறள் 211). காலம் பொய்க்காமல் வானிலிருந்து துளியாக இறங்கி நிலத்தை நனைத்து, பயிர் செழிக்கச் செய்து, மனிதரின் தாகத்தைப் போக்குகின்ற மழைநீர் மனிதரிடமிருந்து கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை; சான்றோரும் கைம்மாறு எதிர்பாராமல் உதவிசெய்வர் என்னும் வள்ளுவர் கூற்று இயேசுவின் போதனைக்கு அரணாகிறது எனலாம்.

மன்றாட்டு:

இறைவா, நன்மைக்கு ஊற்றே நீர் ஒருவரே என உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.