யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் வியாழக்கிழமை
2018-10-25




முதல் வாசகம்

அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-21

சகோதரர் சகோதரிகளே, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூயஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக! நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாகத் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
திருப்பாடல் 33: 1-2. 4-5. 11-12. 18-19

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பெறவேண்டிய திருமுழுக்கு !

நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன் என்னும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவரது சீடர்கள் வியப்படைந்திருப்பர். ஏனென்றால், யோர்தான் ஆற்றில் பலரும் பார்க்கும் வண்ணமே இயேசு திருமுழுக்கு யோவானால் திருமுழுக்கு வழங்கப்பட்டார். எனவே, இயேசு பெற வேண்டிய திருமுழுக்கை ஏற்கனவே பெற்றுவிட்டார். ஆனால், நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு என்று இயேசு கூறுகிறார். இந்த இரண்டாவது திருமுழுக்கு அவரது பாடுகளையும், இறப்பையும் குறிக்கிறது என்பதை அவரது பாடுகளின்போது அவரது சீடர்கள் உணர்ந்திருப்பர். முதலில் இயேசு பெற்ற திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு நியமங்களை நிறைவேற்றுவதற்காகவே, அல்லது பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பதற்காகவே. ஆனால், இரண்டாவது திருமுழுக்குதான் பிறர் மீட்படைய, அவரது பிறருக்கு வாழ்வு வழங்க. அந்தத் திருமுழுக்கு, அதாவது பாடுகளும் இறப்பும் நிறைவேறுமளவும் அவர் பெரும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார். குறிப்பாக, முழு மனதுடன் இறப்பைச் சந்திப்பது உளவியல் நெருக்கடியை அவருக்குத் தந்தது. ஆனாலும், இறுதியில் அந்த இரண்டாவது திருமுழுக்கை இயேசு பெற்றார். அனைவருக்கும் புது வாழ்வு தந்தார்.

நமது வாழ்விலும் இரண்டு திருமுழுக்குகள் இருக்கின்றன. நாம் பிறந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு முதலாவது. அத்திருமுழுக்கின் வழியாக இறைவனின் பிள்ளைகளானோம், திருச்சபையின் உறுப்பினர்களானோம், ஞானத்தைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், இன்னொரு திருமுழுக்கும் நாம் பெறவேண்டும். அதுதான், தூய ஆவியின் வல்லமை. அந்த வல்லமையால் நாம் இறைவனுக்கு, இயேசுவுக்கு சான்றுகளாய் வாழ வேண்டும். ஒருவேளை துன்பங்களை, தோல்விகளை சந்திப்பதும் அந்த சான்று பகர்வதில் அடங்கலாம். இந்தத் திருமுழுக்கு நமக்கு மன நெருக்கடி தரலாம். ஆனால், இயேசுவைப் போல நாமும் உறுதியாய் நிலைத்து நின்று சான்று பகர்வோமா!

மன்றாட்டு:

உமது பாடுகளாலும், சிலுவைச் சாவாலும் எங்களுக்கு மீட்பு வழங்கிய இயேசுவே, நீர் பெற்றுக்கொண்ட இரண்டாவது திருமுழுக்குக்காக உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்விலும் நாங்கள் எங்கள் முதல் திருமுழுக்கில் வழங்கிய வார்த்தைப்பாடுகளைத் தொடர்ந்து வாழ்ந்து, இரண்டாவது திருமுழுக்கு என்னும் சான்று பகர்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.