யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 29வது வாரம் புதன்கிழமை
2018-10-24




முதல் வாசகம்

கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-12

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப் பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன். கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மீட்பளிக்கும் ஊற்றிலிருந்து அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.
எசாயா 12: 2-3. 4. 5-6

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' (லூக்கா 12:48)

திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார்.

கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும் பொறுப்புகளும் பிறருடைய நலனுக்குப் பயன்பட வேண்டும். கடவுளிடமிருந்து வருகின்ற கொடைகள் நமக்குத் தரப்படவேண்டும் என நாம் உரிமை கொண்டாடுவது சரியல்ல. ஏனென்றால் நாம் உரிமையாளர் அல்ல, மாறாக, பொறுப்பாளர் மட்டுமே. பொறுப்பாளராகிய நாம் உரிமையாளராகிய கடவுளுக்குக் கடன்பட்டவர்கள்; எனவே, நம்மிடம் தரப்பட்ட பொறுப்பை நாம் எவ்வாறு செயல்படுத்தினோம் என்பது குறித்துக் கடவுளின் முன்னிலையில் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஆக, மிகுதியாகப் பொறுப்புப் பெற்றவர்களிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என இயேசு கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பொறுப்பு நாம் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதும் அனைவரும் கடவுளைக் கண்டடைய நாம் வழியாக வேண்டும் என்பதுமே. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பதை அவருக்கு அளிக்க நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை நன்றியோடும் கடமையுணர்வோடும் செயல்படுத்த அருள்தாரும்.