யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-09-25




முதல் வாசகம்

பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6,10-13

மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள். திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார். ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும். பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
திருப்பாடல் 119: 1,27. 30,34. 35,44

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் யார் ?

‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.

இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.