யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் புதன்கிழமை
2018-09-19




முதல் வாசகம்

என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31-13: 13

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டு விட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல்33: 2-3. 4-5. 12,22

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். -பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

அக்காலத்தில் இயேசு, ``இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை' என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, `பேய் பிடித்தவன்' என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள்' என்றார்'' (லூக்கா 7:34)

இயேசுவிடம் குற்றம் கண்ட பரிசேயர் சதுசேயர் போன்ற யூத சமயத் தலைவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதை இயேசு ஓர் உவமை வழி விளக்குகிறார். விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் நடுவே, மகிழ்ச்சியோடு நடனமாடுவதா துயரத்தோடு ஒப்பாரி வைப்பதா என்பதில் சண்டை. ஒருசிலர் நடனமாடுவோம் என்கிறார்கள், மற்றவர்களோ ஒப்பாரி வைப்போம் என்கிறார்கள் (காண்க: லூக் 7:31-32). இயேசுவின் எதிரிகளும் அவ்வாறே விவேகமற்ற விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என இயேசு சுட்டிக் காட்டுகிறார். திருமுழுக்கு யோவான் நோன்பிருந்தார் என்பதால் அவர் மக்களோடு கலந்து உறவாடவில்லை என்னும் குற்றச் சாட்டுக்கு ஆளாகிறார். இயேசுவோ மக்களை அணுகிச் சென்று அவர்களோடு சேர்ந்து உணவருந்தி, திராட்சை இரசம் பருகியதால் அவரைப் பெருந்தீனிக்காரன் என்றும் குடிகாரன் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் (லூக் 7:33-34). ஒருவர் செய்ததை மற்றவர் செய்யவில்லை என்பது குற்றச் சாட்டு. ஆக, உணவு உண்டாலும் குற்றம், உணவைத் துறந்தாலும் குற்றம் என்பது இயேசுவின் எதிரிகளின் பார்வை. அது மட்டுமல்ல, இயேசு சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களோடு கலந்து பழகினார் என்பதையும் குற்றமாகக் காட்டுகிறார்கள்.

வெளி அனுசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மையான மதிப்பீடுகளைப் புறக்கணித்த மனிதர்களைத் திருப்திப்படுத்த வரவில்லை இயேசு. அவர் மனிதரின் நலனை மேம்படுத்த வந்தார். அவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்க வந்தார். எனவே, அவர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு உறவாடினார். கடவுள் யாரையும் வேறுபடுத்தி ஒதுக்குவதில்லை என்பதை இவ்வாறு இயேசு நடைமுறையில் எண்பித்தார். அதுபோலவே, கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துவிட்டதால் மனிதர் மகிழ்ச்சியோடு ஒருவர் ஒருவரோடு உறவாடுவது பொருத்தமே என்னும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் இயேசு. கடவுளின் அன்பும் இரக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய விருந்து. அந்த விருந்தை முன்னறிவிக்கும் விதத்தில் இயேசு விருந்துகளில் கலந்துகொண்டு மனித உறவுகளை முறைப்படுத்தினார். இன்றைய திருச்சபையும் கடவுளின் அன்பை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். சமுதாயத்தில் நிலவுகின்ற ஏற்றத் தாழ்வுகள் மறைந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மையைக் கருத்தளவிலும் செயலளவிலும் உலக மக்கள் ஏற்றிட இயேசுவின் சீடர்கள் துணிச்சலோடு உழைக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை அனைவரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.