யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2018-09-17




முதல் வாசகம்

நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 17-26

சகோதரர் சகோதரிகளே, இவ்வறிவுரைகளைக் கொடுக்கும் நான் உங்களைப் பாராட்ட மாட்டேன். ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது நன்மையை விடத் தீமையே மிகுதியாக விளைகிறது. முதலாவது, நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அதை நம்புகிறேன். உங்களிடையே கட்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்போதுதான் உங்களுள் தகுதியுள்ளவர்கள் யாரென வெளிப்படும். இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. ஏனெனில் நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன். ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, ``இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ``இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்'' என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
திருப்பாடல்40: 6-7. 8. 9. 16

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது. -பல்லவி

8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி

16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், `ஆண்டவர் எத்துணை பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

.அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, ``நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்'' என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ``ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.'' இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ``இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் யார் ?

‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.

இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.

மன்றாட்டு:

இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்;. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.