யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் புதன்கிழமை
2018-08-29

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு




முதல் வாசகம்

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்
திருப்பாடல் 71: 1-2. 3-4. 5-6. 15,17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். -பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், 'திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன' என்றனர்'' (மாற்கு 6:14-15)

அதிகாரத்தில் இருப்போர் சிலவேளைகளில் தங்களுக்கு ஏன் அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் விரும்பியதைச் செய்யலாம் என்றும், சட்டம் ஒழுங்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இறுமாப்புக் கொண்டுவிடுகிறார்கள். இதுவே ஏரோது அந்திப்பா என்னும் அரசனின் வாழ்விலும் நிகழ்ந்தது. திருமுழுக்கு யோவான் அரசனின் போக்குக்குச் சவால் விடுத்தார்; அரசனின் முறைகேடான வாழ்க்கையைக் கண்டித்தார். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டது தவறு எனச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். உண்மை பேசிய யோவானுக்குக் கிடைத்த பரிசு கொலைத் தண்டனை.

யோவானின் வரலாற்றுக்கும் இயேசுவின் வரலாற்றுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. மாற்கு இதைத் தெளிவாகக் காட்டுகிறார். கடவுளாட்சி வந்துகொண்டிருக்கிறது எனவும் அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் யோவான் முழங்கினார். இயேசுவும் இறையாட்சி பற்றிய செய்தியை மக்களுக்குச் சொல்லாலும் செயலாலும் அறிவித்தார். யோவான் இருப்பதை விட இறப்பதே மேல் என முடிவுகட்டினாள் ஏரோதியா (மாற் 6:24). பிலாத்து என்னும் ஆட்சியாளனும் அதே முடிவெடுத்து இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு ஆளாக்குவான். யோவான் இறந்ததும் அவருடைய சீடர்கள் அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள் (மாற் 6:29). இயேசு சிலுவையில் இறந்ததும் அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் அவருடைய உடலைக் கல்லறையில் கொண்டுவைத்தார் (மாற் 15:46). துன்பங்கள் வந்தாலும் சரி, ஏன் சாக வேண்டிய கட்டாயம் எழுந்தாலும் சரி, உண்மைக்குச் சான்று பகர்கின்ற பணியை ஊக்கத்தோடு செய்ய வேண்டும் என்று யோவான் முடிவுசெய்தார்; உயிர்துறந்தார். அதுபோலவே, இயேசுவும் இறுதிவரை உண்மைக்குச் சான்று பகர்ந்தார்; சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுவைப் பின்செல்கின்ற மக்களும் அதே வழியில் நடந்து சென்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உண்மைக்குச் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.