யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-08-21




முதல் வாசகம்

நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், `நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்' என்று சொல்கின்றாய். ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! தானியேலைவிட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது. ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப் போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் `நானே கடவுள்' என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே!
இணைச்சட்டம் 32: 26-27. 28,30. 35-36

6 நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன். 27 ஆயினும், `எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!' என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன். பல்லவி

28 அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை. 30 ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ? பல்லவி

35உன அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. 36யb அவர்கள் ஆற்றல் இழந்துவிட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையான◌ார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம், ``செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் இதைக் கேட்டு, ``அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, ``நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நுறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர். ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரிடம், 'செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது' என்றார்'' (மத்தேயு 19:23-24)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதைவிட செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என இயேசு கூறிய பின்னணி என்ன? இயேசுவை அண்டிவந்த செல்வர் ஓர் இளைஞர். ஏராளமான செல்வம் அவருக்கு இருந்தது; ஆனால் செல்வத்தின்மீது அவர் கொண்டிருந்த பற்று இயேசுவின் நற்செய்தியின்மேல் அவர் கொண்ட பற்றைவிட மிகமிக அதிகமாயிருந்தது. எனவே, அந்த இளைஞர் இயேசுவைப் பின்செல்லாமல் ''வருத்தத்தோடு வீடு திரும்பினார்''. அப்போது இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய அறிவுரைதான் செல்வர் இறையாட்சியில் புகுவது கடினம் என்பது. செல்வம் என்பது கடவுளுக்கு எதிரானதா, செல்வம் இல்லாமல் உலகில் நாம் நன்மை செய்ய முடியாதே என்றெல்லாம் சிலர் தடை எழுப்பலாம். செல்வம் தன்னிலேயே தீமையானது என இயேசு கூறவில்லை. மாறாக, செல்வத்தின்மீது மனிதர் அளவுமிஞ்சிய பற்றுக்கொண்டு, கடவுளையும் பிறரையும் அன்புசெய்ய மறந்துவிடும்போது, உண்மையான பற்றினைக் கைவிடும்போது செல்வம் தீங்கிழைக்கும் கருவியாகிவிடுகிறது. இந்நிலையில் பாலஸ்தீனப் பகுதிகளில் காணப்பட்ட பெரிய விலங்காகிய ஒட்டகம் மிகச் சிறிய ஊசியின் காதில் நுழைவது எப்படி இயலாத ஒன்றோ, அப்படியே செல்வத்தையே பற்றிக்கொண்டு கடவுளை மறந்துபோகின்றவர்களும் இறையாட்சியில் பங்கேற்க இயலாது என இயேசு அறிவுறுத்தினார்.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கடினம் என்னும் கூற்றை ஓர் உருவகமாகவும் பார்க்கலாம். அதாவது, பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் நுழைவதற்கென பெரிய வாயில் அமைந்திருக்கும். இரவு வேளையில் பெரிய வாயிலை மூடிவிடுவார்கள். சிறிய வாயில் மட்டுமே திறந்திருக்கும். இதன் வழியே நுழைய வேண்டும் என்றால் குனிந்து, கவனமாகக் காலெடுத்து வைத்தால்தான் இயலும். இத்தகைய சிறிய நுழைவாயிலை ''ஊசியின் காது'' என அழைப்பதுண்டு. இவ்வாயிலில் பெரிய விலங்காகிய ஒட்டகம் நுழைய முற்பட்டால் முழங்காலில் அமர்ந்து, தலைகுனிந்து, தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். இது நடைமுறையில் கடினமானதே. எப்படியாயினும், செல்வத்தைக் குவிப்பதால் விண்ணரசு செல்வோம் என நினைப்போர் உண்மையான செல்வம் கடவுளைப் பற்றிக்கொள்வதே என்பதை அறியாதவர்களே. நீதிமொழிகள் நூல் கூறுவதுபோல, ''முறைகேடாய் நடக்கும் செல்வரை விட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்'' (நீமொ 28:6).

மன்றாட்டு:

இறைவா, இறையாட்சி என்னும் செல்வத்தை நாங்கள் தேடிக் கண்டடையவும் உம் அன்பில் நிலைத்துநின்று வாழவும் எங்களுக்கு அருள்தாரும்.