யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் திங்கட்கிழமை
2018-08-20




முதல் வாசகம்

எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடு வோரின் உணவை உண்ணாதே!'' நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன். அப்போது மக்கள் என்னிடம், `நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ?' என்று கேட்டனர். எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: `ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் தூயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்; நீங்கள் விட்டுச் சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர். நான் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள்; நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்; இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள். தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள். இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்துகொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நீ உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.
இணைச்சட்டம் 32: 18-19. 20. 21

உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய். 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்'' என்றார். அவர், ``எவற்றை?'' என்று கேட்டார். இயேசு, ``கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' என்று கூறினார். அந்த இளைஞர் அவரிடம், ``இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்றார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' என்றார்'' (யோவான் 6:56)

இயேசு மக்களுக்கு நிலைவாழ்வு தரும் உணவைத் தரப்போவதாகக் கூறியதும் அவர்கள் தமக்குள்ளே ''முணுமுணுத்தார்கள்'' (யோவா 6:41). ஆனால், அவர் வழங்கப்போகின்ற உணவு அவருடைய சொந்த ''சதையும் இரத்தமும்'' என்றதுமே மக்களிடையே வாக்குவாதமே எழுந்துவிட்டது! அவர்கள் ''நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்'' என்று வாதாடத் தொடங்கினர். இதைக் கண்ட இயேசு மக்களுக்கு இன்னும் அழுத்தமாகக் கூறிய உண்மை இது: ''எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்'' (யோவா 55). இவ்வாறு இயேசு கூறியதைக் கேட்ட மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அதாவது, எந்த மனிதரும் பிற மனிதரின் சதையை உண்பதை முறையானதாகக் கருத மாட்டார்கள். ஏன், இத்தகைய செயல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூடக் கூறுவார்கள். ஆனால் இயேசு கூறுகின்ற சொற்கள் உண்மையிலேயே அவர் தம்மை நமக்கு உணவாகவும் பானமாகவும் தருகின்ற கொடையைக் குறிக்கின்றன. என்றாலும் இயேசுவின் உடலை நாம் உண்ண முடியுமா, அவருடைய இரத்தத்தை நாம் குடிக்க இயலுமா எனச் சிலர் கேட்கலாம். இங்கே இயேசு கூறுவது நம் ஆன்ம உணவையும் பானத்தையும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் உட்கொள்கின்ற உணவும் அருந்துகின்ற தண்ணீரும் நாம் உயிர்வாழ நமக்குச் சக்தி தருவதுபோல, இயேசுவை நமது உணவாகவும் பானமாகவும் நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய தன்மையை நமது தன்மையாக மாற்றிக்கொண்டால் நாம் ஆன்ம வாழ்வில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைவோம்.

நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றம் பெறுகின்றன என்பது நம் நம்பிக்கை. இயேசுவே தம்மை நமக்குக் கொடையாக அளிக்கின்றார் என்பதே இதன் பொருள். தம்மையே கொடையாகத் தருகின்ற இயேசுவை நாம் ஏற்று, அவருடைய சக்தியிலிருந்து சக்தி பெற்று வாழ்ந்தால் அவருடைய வல்லமை நமக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும். இயேசுவிடம் துலங்கிய பண்புகள் நம்மிடமும் துலங்கும். அப்போது நம் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவும் உகந்ததாகவும் மாற்றம் பெறும். இயேசுவின் சதையை உண்டு. அவருடைய இரத்தத்தைக் குடிக்கும் நாம் ஒருவிதத்தில் இயேசுவின் தன்மையைப் பெறுவதால் அவர் எல்லா மனிதரையும் அன்புசெய்து அவர்களின் நலனுக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் தன்னலம் களைந்து பிறர்நலம் பேணுவதில் நிலைத்திருப்போம்; நிலைவாழ்வு பெற்று மகிழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்திட அருள்தாரும்.