யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-08-07




முதல் வாசகம்

உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2,12-15,18-22

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன். ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18-20. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்."

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2,10-14

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, ``உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே'' என்றனர். மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, ``நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்'' என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, ``பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?'' என்றனர். இயேசு மறுமொழியாக, ``என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்'' என்றார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

வாழ்வு வழிபாடாக மாறட்டும்

லேவியர் புத்தகத்திலே, 11வது அதிகாரத்தில் எவையெவை சாப்பிடக்கூடியவை, எவையெவை சாப்பிடக்கூடாதவை என ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இறந்த மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. பல காரணங்களை நாம் சொல்லலாம். 1. யூதர்கள் தீய ஆவிகளை நம்பினர். இறந்துபோன உடல்மீது தீய ஆவிகளின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தால், தவிர்த்தனர். 2. ஒரு சில விலங்குகள் வேறு மதத்தில் உள்ளவர்களுக்கு புனிதமானவையாக இருந்தன. உதாரணமாக, பூனையும், முதலையும் எகிப்தியர்களுக்கு புனிதமானவை. வேறு மதத்தினர் வழிபடுவது, நிச்சயமாக யூதர்களுக்கு தீட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கும்.3. சில விலங்குகளின் இறைச்சி, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு திங்கிழைக்கக்கூடியதாக இருந்தது. பன்றியின் இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிடாவிட்டால், அது பல வழிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, அதுபோன்று கேடுவிளைவிக்கக்கூடிய இறைச்சியை தவிர்த்தனர். 4. சில மூடநம்பிக்கைகளின் காரணமாகவும், சில விலங்குகளின் இறைச்சியை, யூதர்கள் தவிர்த்து வந்தனர். இந்தப்பிண்ணனியில் தான் இயேசுவின் போதனையை நாம் பொருத்திப்பார்க்க வேண்டும். இயேசுவினுடைய வார்த்தைகள் வெறும் எச்சரிக்கை அல்ல: அது ஒரு புரட்சி. யூத மதத்தினுடைய அடிநாதத்தையே அறுக்கக்கூடிய வார்த்தைகள். பழைய ஏற்பாட்டு லேவியர் புத்தகத்தில் உள்ள, உணவு பற்றிய ஒழுங்குகள் அனைத்தும் முற்றிலுமாக வீண் என்று சொல்லி, பரிசேயர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வார்த்தைகள். ஆனால், இயேசுவைப்புரிந்துகொண்டால், அவர் சொன்ன வார்த்தைகளின் ஆழ்ந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும். சட்டத்தை வெறும் சம்பிரதாயமாக கடைப்பிடித்ததுதான் இயேசுவின் இந்த கோபத்திற்கு காரணம். கரும்பின் சுவை கரும்புச்சாற்றில்தான், அதன் சக்கையில் அல்ல. சட்டத்தின் பயன் அதன் பொருளில், வெறும் வார்த்தையில் அல்ல. இதுதான் இயேசு கற்றுத்தரும் பாடம்.

“பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்று இயேசு சொல்வதின் பொருளும் இதுதரன். நம்முடைய வழிபாடுகளும், நம்முடைய பக்திமுயற்சிகளும் நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒவ்வொரு செயலும் கண்டிக்கத்தக்கவை. ஒன்றுக்கும் உதவாதவை. வாழ்வை மாற்றக்கூடிய அர்ததமுள்ள பக்திமுயற்சிகளில் ஈடுபடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிசாய்த்து, அவரது வழியில் நடந்திட அருள்தாரும்.