யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் திங்கட்கிழமை
2018-07-16




முதல் வாசகம்

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 11-17

எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?'' என்கிறார் ஆண்டவர். ``ஆட்டுக்கிடாய்களின் எரிபலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றை எல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டும் என்று கேட்டது யார்? இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வு நாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும்போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பது இல்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 8-9. 16-17. 21,23

நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-11: 1

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'' இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்' என்றார் (மத்தேயு 10:39)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தீர்க்கமான முடிவெடுத்து, உறுதியான உள்ளத்தோடு அவரைப் பின்தொடர வேண்டும். இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்கவும் அவர்கள் தயங்கக் கூடாது. ஏன், தம் உயிரையே இயேசுவுக்காகக் காணிக்கையாக்கிட அவருடைய சீடர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு தம் உயிரை இழப்போர் உண்மையில் ''அதைக் காத்துக்கொள்வர்'' என இயேசு கூறுவது முன்னுக்குப் பின் முரண்பாடாகப் படலாம். ஆனால் உண்மை அதுவன்று. இவ்வுலகில் நமக்குத் தரப்படுகின்ற உயிர் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிந்துவிடும். ஆனால் மனித வாழ்வு இவ்வுலகத்தோடு முடிந்துவிடுவதல்ல. மனித வாழ்வின் நிறைவு இம்மண்ணக வாழ்வைத் தாண்டிச் செல்கின்ற ஒன்று. நிலையான வாழ்வைப் பெற வேண்டும் என்னும் ஏக்கம் மனித உள்ளத்தில் எப்போதும் இருக்கவே செய்யும். அந்த நிலையான வாழ்வு ஒருநாளும், ஒருபோதும் அழியாத ஒன்றாக இருக்கும் என இயேசு நமக்கு வாக்களிக்கிறார். -- இவ்வுலகக் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, இவ்வுலகத்தைச் சார்ந்தவற்றையே விடாது பிடித்துக்கொள்ள விரும்புகின்ற மனிதர் ஏமாற்றமே அடைவர். அவர்கள் நிலையானது என நினைப்பது உண்மையிலேயே நிலையற்றது என இறுதியில் அவர்கள் உணர்ந்துகொள்வர். இதனால் நாம் மறுவுலக வாழ்வு நமக்கு உண்டு என்னும் நினைப்பில் இவ்வுலக வாழ்வை வெறுக்க வேண்டும் என இயேசு கேட்கவில்லை. இவ்வுலக வாழ்வு கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடையே. ஆனால் இவ்வுலகம் நம் இதயத்தில் கடவுளின் இடத்தைப் பிடித்துக்கொள்ளக் கூடாது. கடவுளுக்கே உரிய மாட்சியையும் வணக்கத்தையும் நாம் இவ்வுலகு சார்ந்த எப்பொருளுக்கும் அளிப்பது ''சிலைவழிபாடு'' போன்றதுதான். உண்மையான கடவுளை நாம் மறந்துவிட்டு மனம் போன போக்கில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பினால் நம் உள்ளத்தில் அமைதி தோன்றாது. எனவே, இயேசுவின் பொருட்டு நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாம் நம் வாழ்வின் நிறைவைக் கண்டுகொள்வோம். இதுவே நம் ஆன்ம வேட்கையைத் தணிக்கின்ற நீரூயஅp;ற்றாக நம்மில் வந்து பாய்ந்து வழிந்தோடும். அப்போது அலைந்து குலைந்து நாம் கலங்காமல் உள்ளத்தில் அமைதி காண்போம்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் வாழ்வின் நிறைவு என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.