யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-06-26




முதல் வாசகம்

என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் எருசலேமைப் பாதுகாத்து விடுவிப்பேன்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 19: 9-11,14-21, 31-35, 36

அந்நாள்களில் அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படை திரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று, எசேக்கி யாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி, “யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது’ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்து விடாதே. இதோ! அசீரிய மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?'' எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார். மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “ கெருபுகள் மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! ஆண்டவரே! நீர் செவிசாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக! ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்! அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.” அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனுக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்! ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழைய மாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்ப மாட்டான். அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர். இந்நகரை நான் பாதுகாப்பேன்; என்பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.” அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர். எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுள் தம் நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார்.
திருப்பாடல்48: 1-2. 2-3. 9-10

ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. பல்லவி

2b மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். பல்லவி

9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 10 கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும். ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்' என்றார்'' (மத்தேயு 7:6)

நாய்கள் மற்றும் பன்றிகள் பற்றிய இக்கூற்று மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. இக்கூற்றின் பொருள் என்ன? ''தூய்மையானது'' என இயேசு குறிப்பிடுவது கடவுளின் பெயர் (காண்க: மத் 6:9 - ''தந்தையே...உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக!''). இயேசு குறிப்பிடுகின்ற ''முத்து'' கடவுளின் ஆட்சிக்கு உருவகம் (மத் 13:45-46இல் வருகின்ற ''முத்து உவமை'' காண்க). ''நாய்கள்'' என இயேசு குறிப்பிடுவது இஸ்ரயேல் குலத்தைச் சாராத ''பிற இனத்தாரை''. இஸ்ரயேலுக்குப் புறம்பே இருந்த தீர், சீதோன் பகுதிகளில் வாழ்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் வந்து தன் மகளைக் குணமாக்கக் கேட்டபோது இயேசு, ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்று கூறியதை இவண் கருதலாம் (காண்க: மத் 15:26). மேலும் யூதர்கள் நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக வீட்டில் வைத்திருப்பதில்லை.''பன்றிகள்'' யூதர்களின் கலாச்சாரத்தால் அசுத்தமான மிருகங்களாகக் கருதப்பட்டன. மேற்கூறிய பின்னணியில் பார்க்கும்போது இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு, அதாவது இஸ்ரயேல் அல்லாத பிற இனத்தையோ மதத்தையோ சார்ந்த மக்களுக்கு அறிவிக்க வேண்டாம் எனக் கூறியது தெரிகிறது. இயேசு நற்செய்தியை அறிவிக்க வந்தது இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே. அதுபோலவே, சீடர்களும் இஸ்ரயேலரிடையே நற்செய்தி அறிவிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என இயேசு கேட்டார். ''பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்'' என இயேசு திருத்தூதர்களுக்குக் கூறியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 10:5-6). இஸ்ரயேல் மக்களே நற்செய்தி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்றால் (காண்க: மத் 5:10; 10:16-36), பிற இனத்தார் அதைவிடவும் அதிக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என இயேசு கூறியதாக நாம் பொருள் கொள்ளலாம்.

அதே நேரத்தில், மத்தேயு நற்செய்தியில் பிற இனத்தாருக்கும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்குண்டு என்னும் செய்தியும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இயேசு பிறந்ததும் பிற இனத்தாராகிய ''கீழ்த்திசை ஞானிகள்'' அவரைத் தேடி வணங்க வந்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 2:1-12). பிற இனத்தைச் சார்ந்த கானானியப் பெண் இயேசுவிடம் சென்று, பேய் பிடித்த தன் மகளுக்கு அவர் நலமளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பெண்ணின் நம்பிக்கையைப் போற்றியதோடு அவரின் மகளையும் குணமாக்கியதையும் நாம் கருதலாம் (காண்க: மத் 15:21-28). இறுதியாக, உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடரை அழைத்து அவர்களுக்குப் பணிப் பொறுப்புக் கொடுத்து, ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்'' என்று கட்டளை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது (காண்க: மத் 28:19). ஆக, கடவுளின் திட்டத்தில் இஸ்ரயேலுக்கு ஒரு சிறப்பிடம் இருப்பது தெளிவு. அதே நேரத்தில் கடவுள் வழங்குகின்ற மீட்பும் இயேசு அறிவித்த மீட்பு நற்செய்தியும் உலகிலுள்ள எல்லா மக்களினத்தாருக்கும் கடவுளின் கொடையாக அளிக்கப்படுகிறது என்பதும் உறுதி. இயேசுவின் நற்செய்திப் பணியை நாம் தொடர்ந்து ஆற்றிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, நற்செய்தி அறிவிப்பதில் நாங்கள் உறுதியாகச் செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.