யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் திங்கட்கிழமை
2018-06-25




முதல் வாசகம்

ஆண்டவர் இஸ்ரயேலைத் தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 17: 5-8,13-15,18

அந்நாள்களில் அசீரியா மன்னன், நாடு முழுவதன் மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர். மேலும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும், இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின் படியும் நடந்து வந்தனர். ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: �உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.� ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்து, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; �வேற்றினத் தாரைப் பின்பற்றலாகாது� என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர். எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளிவிட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எங்களுக்குத் துணை செய்யும் ஆண்டவரே, எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளும்!
திருப்பாடல் 60: 1. 2-3. 10-12

1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். பல்லவி

2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது; 3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். பல்லவி

10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ! 11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண். 12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?' என்றார்'' (மத்தேயு 7:3)

துரும்புக்கும் தூணுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நாம் அறிவோம். ஒன்று மிகச் சிறிது, மற்றது மிகப் பெரிது. கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை நாம் ''துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான்'' எனக் கூறுவதுண்டு. இயேசு துரும்பையும் தூணையும் ஒப்பிட்டுப் பேசுவது மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகளை நாம் எவ்வாறு வளர்க்கலாம் என்பதை ஓர் உருவகம் வழியாகச் சுட்டிக்காட்ட வழியாகிறது. நம்மைவிடவும் பிறரிடம் அதிக செல்வம் இருக்கலாம்; பிறர் நம்மைவிட அதிகமான புகழ் பெறலாம். அப்போது நம் உள்ளத்தில் பொறாமை எழுகிறது. இவ்வாறு பொறாமைப்படுவது தவறு என இயேசு கற்பிக்கிறார். இது மட்டுமல்ல, பிறரிடம் குறைகாண்பதையும் நாம் தவிர்க்க வேண்டும். பிறர் தவறு செய்தால் நாம் கண்களை மூடிக்கொண்டு, அத்தவற்றைக் காணாததுபோல நடக்க வேண்டும் என இயேசு கூறவில்லை (காண்க: மத் 7:3-5). மாறாக, பிறரிடம் குறை காண வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக அவர்களுடைய சொல்லையும் செயலையும் பூதக் கண்ணாடி கொண்டு ஆய்கின்ற மன நிலையை இயேசு கண்டிக்கிறார். தவறு செய்யாத மனிதர் இல்லை. எனவே, பிறரிடம் தவறு உண்டு எனத் தீர்மானிப்பதற்கு முன்னால் தன்னிடம் இருக்கின்ற தவற்றினை அடையாளம் காண்பதே முறை. பிறரிடம் நாம் காண்கின்ற குறை ஒரு துரும்புக்கு நிகர் என்றால் நம் குறை ஒரு பெரிய தூணுக்கு அல்லது ''மரக்கட்டைக்கு'' நிகராக இருக்கக் கூடும்.

நம்மிடம் இருக்கின்ற குறைகளை நாம் களைந்துவிடுவது முக்கியம். அப்போது பிறரிடம் குறையிருந்தாலும் அக்குறையை அவர்கள் களைவதற்கு நாம் துணைசெய்ய இயலும். இது பிறருடைய குற்றத்தை மிகைப்படுத்தும் நோக்கத்தோடோ, அல்லது அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடோ நிகழ்கின்ற செயலாக இராது. மாறாக, பிறர்மேல் நாம் உண்மையான அன்பு கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் குறைகளைக் களைந்து இன்னும் சிறப்பான மனிதராக உயர்ந்திட நாம் அவர்களுக்குத் துணையாக வர முடியும். ''மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்'' என இயேசு கூறிய உண்மை இங்கே வெளிப்படுவதைக் காண்கிறோம் (மாற் 6:14). பிறர் நலனில் நாம் அக்கறை கொண்டால் நம் நலனில் கடவுளும் அக்கறை கொள்வார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் குற்றங்களை நீர் மன்னிப்பதுபோல நாங்களும் பிறர் குற்றங்களை மன்னிக்க அருள்தாரும்.