யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-06-15




முதல் வாசகம்

மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9ய,11-16

அந்நாள்களில் எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன் என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு அவர், படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
திருப்பாடல் 27: 7-8. 8-9. 13-14

7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். 8 `புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம். பல்லவி

8ய ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். 9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. `தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இச்சையான பார்வையும் விபச்சாரமே

கற்பு களவுபோவது விபச்சாரத்தில் மட்டுமல்ல.கற்பு பறிபோவது வன்முறை கலாச்சாரத்தில் மட்டுமல்ல. கற்பை இழப்பது பெண் மட்டுமல்ல, ஆணும்தான். கற்பை இழப்பது தொலைக்காட்சிப் பெட்டியும் இணைய தளமும் அல்ல.கற்பு களங்கம் அடைவது குருந்தகடுக்கு அல்ல.கற்பு என்பது இறைவனுக்கும் உனக்கும், உனக்கும் உன் அயலானுக்கும் இடையே உள்ள, இறைவனால் அங்கிகரீக்கப்பட்ட உறவு முறை. இந்த உறவு களங்கப்படுவது செயலில் என்பதைவிட சிந்தனையில் அதிகமாக, ஆபத்தான அழிவை உண்டாக்குகிறது என்பது இயேசுவின் புதிய விளக்கம். பார்க்கும் பொருளும் ஆளும் இடமும் பார்க்கின்ற விதமும் கற்பு என்னும் புனிதமான உறவை களங்கப்படுத்திவிடுகின்றன. எதார்த்தமான நிகழ்வும் செயலும் சொல்லும் கற்பு என்னும் இப் புனிதமான உறவில் விரிசல் ஏற்படுத்துவதில்லையா! சாதாரண நிகழ்வைத் தவறான கண்ணேட்டத்துடன் பார்க்கும்போதும் விமர்சனம் செய்யும்போதும் கொச்சைப்படுவதும் கோரப்படுவதும் புனிதமான உறவில் வாழும் கற்பு நிறைந்த இதயங்கள்அல்லவா. "ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று". ஆகவே நல்ல கண்ணேட்டத்துடன் எதையும் பார்ப்போம். நடக்கும் நிகழ்ச்சியை நல்ல மனநிலையில் காண்போம். எதையும் நல்ல கண்ணேட்டத்துடன் அணுகுவோம். அப்படியானால் கையையோ கண்ணையோ இழப்பதற்கு அவசியமே இருக்காது. இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் சிந்தனை, சொல், செயல் தூயனவாக இருக்க அருள்தாரும்.