யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-05-06

(இன்றைய வாசகங்கள்: திருத்துதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:25-26, 34-35, 44-48,பதிலுரைப்பாடல் திபா. 98:1-4,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:7-10,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17)




என் அன்பில் நிலைத்திருங்கள். என் அன்பில் நிலைத்திருங்கள். என் அன்பில் நிலைத்திருங்கள்.


திருப்பலி முன்னுரை

"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்."

ஆண்டவருக்குரியவர்களே, இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இயேசுவுக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருக்கின்ற உண்மையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மோடு என்றும் இருக்கும்படியாக தூய ஆவியார் என்ற துணையாளரை இயேசு நமக்கு அளித்துள்ளார். தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்புக்கு ஏற்ப இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடித்து, கடவுளை அன்பு செய்கிறவர்களாக வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டது.
திருத்துதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:25-26, 34-35, 44-48

அக்காலத்தில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.பேதுரு, ;எழுந்திடும்: நானும் ஒரு மனிதன்தான் ; என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதரு பேசத் தொடங்கி, ;கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்: ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, ;நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? ; என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
பதிலுரைப்பாடல் திபா. 98:1-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவரு டைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி:

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ர யேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி:

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுள் அன்பாய் இருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 4:7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். ;நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்: ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பின் ஊற்றே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக உமது அன் பின் நற்செய்தி விரைந்து பரவவும், மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்படவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. பேரன்பையும் உறுதிமொழியையும் என்றும் நினைவுகூரும் தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாங்களும்: உமது கட்டளைகளைக் கடைப்பிடித்து, இறையன்பில் நிலைத்திருந்து, நேர்மையாகச் செயற்பட்டு இறையரசின் மக்களாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் தந்தையே இறைவா!

வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பு பொழிபவரே இறைவா,

உலகில் பசி, நோய், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் துயருறும் மக்கள் அனைவரும், உமது அன்பின் அரவணைப்பில் புதிய விடியலைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத் திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. மாவேந்தரான தந்தையே இறைவா!

எமது குடும்பங்கள் ஒவ்வொன்றும், தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொண்டு பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. அனைவருக்கும் வலுவூட்டும் தந்தையே இறைவா!

பல்வேறு துன்பங்களால் ஆட்கொள்ளப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்று, நிறைவோடும், மகிழ்வோடும் வாழ்ந்திட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” !

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்னும் இந்தப் பிரபலமான இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பும்ரூhநடடip; அனைத்துமே நமது சொந்த முயற்சிகள் அல்ல. அனைத்தும் இறைவனின் கொடை. இறைவனே நம்மைத் தேர்ந்துகொண்டதால், நமக்குக் கிடைத்தவை. நமது தகுதியின்மையைப் பாராமல், அவரது இரக்கத்தையே கண்ணோக்கியதால், நாம் பெற்றுக்கொண்டவை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்துடன், எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்க இன்றைய வாசகம் அழைக்கிறது. ‘நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்’. ஆம், இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே நாம் கனி தரவேண்டும். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த உண்மையை மறவாமல், நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் உழைப்போமாக.

மன்றாட்டு:

தாயின் வயிற்றிலேயே என்னைப் பெயர் சொல்லி அழைத்த இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் தந்த அழைத்தலுக்காகப் போற்றுகிறேன். இந்த அழைத்தலுக்கேற்ற வகையில் வாழ அருள்தாரும். மிகுந்த கனி தரும் மரமாக என்னை மாற்றும். ஆமென்.