யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2018-05-03

புனித பிலிப்பு புனித யாக்கோப்பு




முதல் வாசகம்

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே;
1கொரிந்தியர் 15:1-8

1 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். 2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. 3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புக்களின்ன அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்ற
திருப்பாடல்கள் 19:2-5

2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை பல்லவி .

4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார் பல்லவி .

5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.


நற்செய்திக்கு முன் வசனம்

நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்என்கிறார் ஆண்டவர். .

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14;6-14

இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது; "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். 14 நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.

நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவிடம் இன்னும் விளக்கம் கேட்கன்றனர் திருத்தூதர்கள். நம் வாழ்வின் இலட்சியம் தந்தை இறைவனின் திருப் பாதம் அடைவது. தந்தையின்; திரு உளத்தை வாழ்வதே உண்மை வாழ்வு. தந்தையின் திருஉளம் காட்டும் பாதையில் வாழ்வதே நம் வாழ்க்கைப் பாதை. இதையே இயேசு தந்தை இறைவனோடு உள்ள உறவில் காண்கிறார். அதையே வெளிப்படுத்துகிறார். ஆகவே இறை வழியில் உண்மையின் பாதையில் நடக்கும் மனிதன் தன் வாழ்வைக் கண்டடைகிறான்; இயேசுவைக் காண்கிறான். இயேசுவின் வழியாகத் தந்தை இறைவனையும் கண்டு அனுபவிக்கிறான்.இத்தகையோர் வாழ்வில் எந்த குறையும் இருக்காது. இயேசு தந்தையின் திரு உளத்தை நிறைவேற்றி, அவரையே தன் வாழ்வாக, வழியாக, உண்மையாக்கொண்டு வாழ்ந்ததால், நானும் தந்தையும் ஒன்றே என்று தந்தை இறைவனோடு தனக்குள்ள உறவினை உலகுக்குச் சொல்கிறார். சொல்வதை நம்பாவிடில் என் செயல்களின் பொருட்டாகிலும் நம்புங்கள். தான் வாழ்ந்த வாழ்க்கை தந்தை இறைவனை வெளிப்படுத்தும் சாட்சியம். இவ்வுண்மையை ஏற்றுக்கொள்ளும் நாமும், அறிய பெரிய காரயங்களைச் சாதிக்க முடியும். நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்று சொன்ன இயேசுவின் பாதையில் நம் வாழ்க்யை அமைத்துக்கொண்டால் பெரியவற்றை உங்கள் வாழ்வில் செய்வீர்கள். "நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்".(யோவான் 14:12)

மன்றாட்டு:

உமது வார்த்தைகளால் எம்மைத் தூய்மைப்படுத்தும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு இறைவார்த்தைமீது தாகத்தைத் தந்தருளும். இதனால் நாங்கள் மென்மேலும் தூய்மை அடைவோமாக. ஆமென்.