யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் புதன்கிழமை
2018-05-02




முதல் வாசகம்

கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்15:1-6

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது" என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2 அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 3 அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 4 அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். 5 ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, "அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்" என்று கூறினர். 6 இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்
திருப்பாடல்கள்122:1-2 4-5

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் ", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.பல்லவி

2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி

.4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.பல்லவி

5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.


நற்செய்திக்கு முன் வசனம்

"உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர் என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:1-8

1 "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். 2 என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். 3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். 7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். 8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தூய்மையாய் இருக்கிறீர்கள்(யோவா 15: 1-8 )

“நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்”“ என்னும் இயேசுவின் சொற்களுக்காக இன்று நன்றி சொல்வோம்.
இயேசுவின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அவரது சொற்களைக் கேட்டுப் பேய்கள் அலறியடித்துக்கொண்டு ஒடின. அவரது வார்த்தைகளைக் கேட்டு நோயாளர்கள் நலம் பெற்றனர். அவரது வார்த்தையால் தண்ணீர் இரசமானது. அவரது வார்த்தைக்கு இயற்கையும் பணிந்தது, கடல் அமைதி அடைந்தது.
இன்றைய வாசகத்தில் இயேசுவின் வார்த்தைகள் தூய்மைப்படுத்துகின்றன என அறிகிறோம். அவரது சொற்கள் நம்மைப் பாவத்தினின்றும், தீமைகளினின்றும், தீய பழக்கங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துகின்றன. அவரது வார்த்தையைக் கேட்பதன் மூலமும், வார்த்தையைச் சுமப்பதன் மூலமும், வார்த்தையைச் சிந்திப்பதன் வழியாகவும் நாம் தூய்மை அடைய இயேசு இன்று அழைக்கிறார்
எனவே, நாள்தோறும் விவிலியத்தைக் கையில் ஏந்துவோம், விவிலியத்தை வாசிப்போம், செபிப்போம்.

மன்றாட்டு:

உமது வார்த்தைகளால் எம்மைத் தூய்மைப்படுத்தும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்கு இறைவார்த்தைமீது தாகத்தைத் தந்தருளும். இதனால் நாங்கள் மென்மேலும் தூய்மை அடைவோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.