யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2018-05-01




முதல் வாசகம்

"நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:19-28

19 அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள். 20 சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார். 21 அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22 அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்" என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். 23 அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24 பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25 பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26 அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27 அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28 அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
திருப்பாடல்கள்145;8-13,21

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள் பல்லவி

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். பல்லவி

13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

21 என்வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


நற்செய்திக்கு முன் வசனம்

நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:27-31

27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன். 30 இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை. 31 ஆனால் நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்து கொள்ள வேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்றார்'' (யோவான் 14:27)

இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களிக்கிறார். வழக்கமாகக் கூறப்படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக்கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவுளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக் கடவுளோடு ஒன்றிணைக்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமைதியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத்திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, இயேசு வாக்களிக்கின்ற அமைதி நம்மைக் கடவுளோடு உறவாக்குகின்ற அதே வேளையில் நம்மை அடுத்திருப்போரோடும் நாம் நல்லுறவில் வாழ்ந்திட நமக்கு வழியாகிறது.

இயேசு கொணர்கின்ற அமைதி சொல்லளவில் நின்றுவிடாது. மாறாக, கடவுளின் வல்லமையால் அமைதி செயலாக்கப்படும். இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, ''அமைதியாயிரு!'' என்றதும் ''மிகுந்த அமைதி'' உண்டாயிற்று (காண்க: மாற் 4:39). ஆனால் கடவுள் அமைதி கொணர்வது இயற்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு நின்றுவிடுவதில்லை. அது மனித உள்ளங்களைப் பண்படுத்தி எல்லா மனிதரும் அன்பும் நீதியும் நிறைந்த உலகை உருவாக்கிட அவர்களுக்கு ஊக்கம் தருகின்ற சக்தியாகவும் செயல்படுகிறது. எனவே, அமைதி என்பது போர் நிகழா நிலை மட்டுமல்ல, மாறாக, கடவுள் உலகுக்கென்று வகுத்த திட்டத்தை மனிதர் நன்மனத்தோடு இணைந்து செயல்படுத்துவதன் பயனாகவே அமைதி தோன்றும். இத்தகைய அமைதி கடவுளின் கொடையாக நமக்கு அளிக்கப்படும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் இக்கொடையை நாம் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிலையாக நம்மிடையே நிலவிட நாம் உழைக்கவும் வேண்டும். ஆக, கடவுள் வாக்களிக்கின்ற அமைதி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் உலகிலும் நிலவித் தழைத்திட வேண்டும் என்றால் கடவுளின் அருளோடு நாமும் ஒத்துழைப்பது தேவை.

மன்றாட்டு:

இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் இவ்வுலகிற்கும் அளித்தருளும்.