யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 4வது வாரம் புதன்கிழமை
2018-04-25

புனித மாற்கு




முதல் வாசகம்

அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்
1பேதுரு 5:5-14

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்." 6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். 7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. 9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? 10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். 11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். 12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். 13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். 14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

:: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.
திருப்பாடல்கள் 89:1-2,5-6,15,16

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

நற்செய்தி வாசகம்

மாற்கு16:15-20

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 15 16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். 19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்...நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்றார்'' (யோவான் 16:16,20)

இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்திய வேளையில் அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். விரைவில் தாம் இறக்கப் போவதை இயேசு முன்னறிவித்தார். எனவே, ''இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்'' என்று இயேசு கூறினார். இயேசுவைக் காணாமல் சீடர்கள் துயருறுவார்கள் என்பதும் அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. சீடர்கள் அனுபவித்த துயரம் சிறிது காலத்திற்கு மட்டுமே. எனவேதான் இயேசு அவர்களை நோக்கி, ''மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார். இது இயேசுவின் சாவுக்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்து, சீடர்களுக்குத் தோன்றுவார் என்னும் செய்தியின் முன்னறிவிப்பாயிற்று. ஆக, சீடர்கள் துயரப்படுவார்கள் என்பது உண்மையாயினும் அவர்களுடைய துயரம் ஒருநாள் மகிழ்ச்சியாக மாறும் என்பது அதைவிட அதிக உறுதியான உண்மை.

இயேசுவின் சீடர்களாக வாழ்கின்ற நமக்கும் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் பொருந்தும். அதாவது, இயேசுவை நம்பிக்கையோடு வாழ்கின்ற மக்களுக்குத் துன்ப துயரங்கள் வரும். அவர்களுடைய நம்பிக்கையின் பொருட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவர். அவர்களைத் துன்புறுத்துவோர் ஏதோ நல்ல காரியம் செய்வதுபோல நினைக்கக் கூடும். ஆனாவ் இத்துன்பமும் துயரமும் ''சிறிது காலம்'' மட்டுமே நீடிக்கும். ஏனென்றால் இயேசு தம் சீடர்களுக்கு மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவே வந்தார். அந்த மகிழ்ச்சி நம் மண்ணுலக வாழ்வுக்குப் பின் வருகின்ற விண்ணுலக வாழ்வைச் சார்ந்தது மட்டுமல்ல. இயேசு வாக்களிக்கின்ற மகிழ்ச்சி இவ்வுலகத்திலேயே தொடங்குகிறது என்பதே உண்மை. ஏனென்றால் இயேசு நம்மோடு வாழ்கின்றார். அவர் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரிந்து போய்விடவில்லை. இதை நாம் உண்மையாக நம்பினால் நம் உள்ளத்தில் துயருறுவதற்குத் தேவையில்லை. இயேசு நம்மைவிட்டு மறைந்ததுபோன்ற உணர்வு நம்மில் எழுந்தாலும் அது ''சிறிது காலம்'' மட்டுமே என நாம் அறிவோம். ஆக, இயேசுவின் சாவிலும் உயிர்த்தெழுதலிலும் பங்குபெறுவோர் இவ்வுலகிலேயே விண்ணகத்தின் முன்சுவையை அறிகின்றார்கள் எனலாம். நமக்கு வழங்கப்படுகின்ற மகிழ்ச்சி ஒருநாள் நிறைவுபெறும், முழுமையடையும் என்பது நம் நம்பிக்கை.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்ப துயரங்களின் நடுவிலும் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.