யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-04-15

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19, திருப்பாடல் 4: 1. 6. 8,திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5 ,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48)




உங்களுக்கு அமைதி உரித்தாகுக!


திருப்பலி முன்னுரை

உண்மைக்குரியவர்களே,

உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இன்றைய திருவழிபாடு இயேசுவின் உயிர்ப்பின் அனுபவத்தை முழுமையாக உணரவும், ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. உண்மையை ஏற்க மனதின்றி நாம் கலக்கம் அடையும் வேளையில், கடவுள் நமக்கு தெளிவை வழங்குகிறார். திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்த மெசியா இயேசுவே என்பதை உணர்ந்து, அவரது சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 13-15, 17-19

அந்நாள்களில் பேதுரு மக்களை நோக்கிக் கூறியது: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே.
திருப்பாடல் 4: 1. 6. 8

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

6 `நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?' எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். பல்லவி

8 இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்துகொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். ``அவரை எனக்குத் தெரியும்'' எனச் சொல்லிக்கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ``உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?'' என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ``மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே'' என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், `மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ``பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. இரக்கத்தின் ஊற்றாம் இறைவா,

இயேசுவின் உயிர்ப்பில் முழுமையான நம்பிக்கை கொண்டு, உமது சாட்சிகளாக வாழ்ந்து வருகின்ற திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தால் புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. மேன்மைமிகு அரசராம் இறைவா,

உலகெங்கும் வாழும் பிற சமயத்தினர் முன்னிலையில் உண்மையின் சாட்சிகளாக வாழ்ந்து, உமது அரசைக் கட்டியெழுப்ப கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும், அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம், ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத் திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!

பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!"

இயேசுவின் உயிர்ப்பு பலருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. பலவித உணர்வுகளுக்கு மத்தியில் அத்தனை திருத்தூதர்களும் பரிதவித்துள்ளர். இன்றைய வாசகப் பகுதியில அவர்களின் பல்வேறு உணர்வுகளும் வெளி ப்படுத்தப்படுகின்றன. திகில், அச்சம், கலக்கம், ஐயம், அமைதி, மகிழ்ச்சி ஆகிய உணர்வை வெளிப்படுத்தும் சொற்றொடர்களும், பாருங்கள், தொடுங்கள், உண்ணுங்கள்,என்னும் சொற்றொடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுச் செயல்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு வழங்கும் நிஜ வடிவின் உணர்வுப்பூர்வமரன சான்றுகள்.

இயேசுவின் உயிர்ப்பு அவரது உயிர்புபற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அவரது உயிர்ப்பு என்பது ஆவி உலக வாழ்வு அல்ல; இவ்வுலகில் வாழும் முழு மனித வாழ்வு; உடலும் ஆவியும் உள்ள வாழ்வு. ஆகவேதான் தொட்டுப் பாருங்கள்என்றார். அவர்களோடு உண்டார். மனிதனின் எல்லா உணர்வுப்பூர்வ சந்தேகங்களுக்கும் தீர்வை வழங்குகிறார் இயேசு. நம்; இறைவன் இயேசு நம் வாழ்வின் சந்தேகங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குபவர். நம் வாழ்வின் பயம், அச்சம், கலக்கம் இவை அனைத்தையும் அகற்றுவார். நம்மோடு உண்டு உறையாடி நம்மை மகிழ்விப்பவர் நம் இறைவன். அந்த அன்பு தெய்வம் நம்மோடு உண்டு உறையாடிட இடம் கொடுப்போம். நம் கவலை எல்லாம் நீங்கும். அச்சம் அகலும். அமைதி அதிகரிக்கும். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். ஆமென்.