யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம்
2018-04-07

பாஸ்கா எண்கிழமை சனி




முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள்.
அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர்.
அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

- ஆண்டவரின் அருள்வாக்கு.

- இதறைவனுக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
திபா 118: 1,14-15. 16,18. 19-21

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.
இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- கிறிஸ்துவின் நற்செய்தி.

- கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.




இன்றைய சிந்தனை

"மகதலா மரியா சீடரிடம் சென்று, 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்றார்" (யோவான் 20;18)

மகதலா மரியாவுக்குத் "திருத்தூதருக்குத் திருத்தூதர்" என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. யோவான் நற்செய்திப்படி, மகதலா மரியா இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு வாரத்தின் முதல்நாள் விடியற்காலையே வந்து, உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தார். புத்துயிர் பெற்று எழுந்த இயேசுவைச் சந்தித்த முதல் சீடர் மகதலா மரியா. ஆனால் அவர் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசு அவரைப் பார்த்து, "மரியா" என்று பெயர்சொல்லிக் கூப்பிட்ட வேளையில்தான் மரியா தம் முன்னிலையில் நின்றவர் இயேசுவே என அடையாளம் கண்டார். உடனே இயேசுவை நோக்கிப் "போதகரே" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கிறார். அதன்பின்னர் இயேசு மரியாவுக்கு ஒரு சிறப்புப் பணி கொடுக்கிறார். அதாவது மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என்னும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மரியாவும் சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார். இங்கு மரியா இயேசுவை "ஆண்டவர்" எனக் குறிப்பிடுவது கருதத் தக்கது. இயேசு ஒரு போதகர் மட்டுமல்ல, கடவுளின் இயல்பில் பங்குபெறுகின்ற "ஆண்டவர்".

உயிர்பெற்றெழுந்த இயேசு நம்மோடு உயிர்வாழ்கின்றார். அவரை நாம் அடையாளம் காண வேண்டும் என்றால் நாமும் ஒரு நம்பிக்கைப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இயேசுவை நாமும் சந்திக்க வேண்டும். இயேசு நம்மைப் பெயர்சொல்லி அழைப்பதை நாம் கேட்க வேண்டும். நாம் பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு அவர்களையும் இயேசுவில் நம்பிக்கை கொள்ள இட்டுச் செல்ல வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர எங்களைத் திடப்படுத்தியரும்.