யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2018-03-27

புனித வார செவ்வாய்




முதல் வாசகம்

நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 49:1-6

1 தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.2 என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார்.3 அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார்.4 நானோ, வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது: என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது என்றேன்.5 யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்:6 அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்
திருப்பாடல்கள் 7:1-6, 15, 17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும்.

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது.

17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:21-33, 36-38

21 இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று திட்டவட்டமாகக் கூறினார்.22 யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.23 இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பு கொண்டிருந்தார்.24 சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ' யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள் ' என்றார்.25 இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ' ஆண்டவரே அவன் யார்? ' என்று கேட்டார்.26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ' நீ செய்யவிருப்பதை விரைவில் செய் ' என்றார்.28 இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை.29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.30 யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.36 சீமோன் பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்? ' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ' நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய் ' என்றார்.37 பேதுரு அவரிடம், ' ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன் ' என்றார்.38 இயேசு அவரைப் பார்த்து, ' எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்"

உண்மையிலே இந்த இயேசு ஒரு வித்தியாசமான ஆள். மனிதன் வாழ வேண்டும். அதிலும் நலிந்தோர், நலமற்றோர், நசுக்கப்பட்டோர், வாழவேண்டும் என்பதில் தணியாத தாகம். பாவிகள் மனமாற்றம் பெற்று வாழவேண்டும் என்பதில் அப்படி ஒரு வெறி. அதற்கான வாய்ப்புக்கள் வழங்குவதில் வள்ளல். அப்படியொரு அடுக்கடுக்கான வாய்ப்பினைத் தன்னைக் காட்டிக்கொடுக்க இருக்கும் யூதாஸ{க்கு வழங்கவும் இயேசு தயங்கவில்லை. "நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" (யோவா12:8) என்று மறைமுகமாக யூதாஸ{க்கு உணர்த்துகிறார். மீண்டும் யோவான்13:21 "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று சூசகமாக யூதாஸின் மனமாற்றத்திற்கு அழைப்பு கொடுக்கிறார். அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்து, அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார். சாத்தான் அவனுக்குள் நுழைந்த பின்னரும் கூட யூதாஸைக் கைநெகிழ இயேசு விரும்பவில்லை. மீண்டும் அவனைக் காக்கும் முயற்சியில் இறங்குகிறார்."நீ செய்யவிருப்பதை விரைவில் செய்" என்று யூதாஸின் கடின மனதைக் கரைக்கும் கடைசிகட்ட முயற்சியைத் தொடங்குகிறார்.யூதாஸிலும் அவனைச் சுற்றிலும் இருளின் ஆதிக்கமே மேலோங்கி நிற்பதை உணர்ந்த இயேசு தன் முயற்சியைக் கைவிடுகிறார்.அது இரவு நேரம்.

தன்னைக் காட்டிக்கொடுக்க இருக்கும் யூதாஸின் மீதும் இவ்வளவு அன்பும் இரக்கமும் கொண்டுள்ளாராயின் உன்னை இழக்கச் சம்மதிப்பாரோ?! ஒருபோதும் சம்மதியார். உனக்காகச் சிலுவையில் விரித்த கரங்களோடு காத்திருக்கின்றார். எத்தனைமுறை காட்டிக்கொடுத்தாலும் மறுதலித்தாலும் உன் நல் வாழ்வுக்காகக் காத்திருக்கிறார். ஒளியாம் அவருள் வருவோம். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, அனைவருக்கும் வேறுபாடின்றி உதவுகின்ற மனநிலையை எங்களுக்கு அளித்தருளும்.