யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-02-25

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18,திபா 116: 10,15. 16-17. 18-19 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34 ,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10 )




மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

மாட்சிக்குரியவர்களே,

எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடு கள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
திபா 116: 10,15. 16-17. 18-19

`மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. பல்லவி

16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், ``மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, `இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மாட்சி மிகுந்தவரான இறைவா,

திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையின் வழிமரபினராக விளங்கும் திருச்சபையின் மக்களை, உமது மாட்சிக்கு உகந்தவர்களாக உருமாற்றும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. மகத்துவம் மிக்கவரான இறைவா,

சிலுவை வழியாக உம் திருமகன் நிறைவேற்றிய மீட்புச் செயலை, உலக மக்கள் அனைவரும் அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உம்மில் நம்பிக்கை கொண்டவர்களாய் நீர் தருகின்ற மாட்சியை உரிமையாக்கவும் அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நிறைவு தருபவரான இறைவா,

உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியையும், மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வை வழங்கும் தந்தையே இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

06. எங்கள் பேரின்பமாகிய இறைவா!

உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

07. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா!

இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

08. எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் உருமாற்றம் !

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நமக்கு இறைமொழி விருந்தாகத் தருகிறது தாய்த் திருச்சபை. இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வுகளின் தொகுப்புதான் உருமாற்ற நிகழ்வு. மொத்தம் எத்தனை நிகழ்வுகள்?

1. மலைமீது இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது,

2. அவரது முகத்தோற்றம் மாறியது.

3. அவருடைய ஆடையும் வெண்மையாக மாறியது.

4. மோசேயும், எலியாவும் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

5. வரவிருக்கும் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் என்கிறார் நற்செய்தியாளர்.

6. மேகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்து, இயேசுவுக்கு ஒப்பிசைவு கொடுத்தது.

இத்தனை நிகழ்வுகளும் இணைந்ததுதான் இயேசுவின் உருமாற்றம். இயேசுவின் இறைத்தன்மையை, அவருடைய மாட்சிமையை வெளிப்படுத்திய அதே வேளையில், அவருடைய பாடுகளை, கீழ்ப்படிதலையும் சீடர்களுக்கு உணர்த்தியது.

இந்த உருமாற்ற நிகழ்விலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

1. நாம் இறைவேண்டலின் வழியாக, இறைவனோடு நெருக்கமான உறவுகொள்வதன் வழியாக அவருடைய மாட்சியில் பங்குபெறலாம். அவரது சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

2. இறைத் தந்தைக்குப் பணிந்து வாழ்வதன் மூலமே அவருடைய ஒப்பிசைவைப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.

3. துன்பங்கள், தோல்விகள் நிரந்தரமல்ல. அவை வெற்றிக்கான படிக்கட்டுகள். எனவே, துணிவுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இத்தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்வோம்.

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாறுவோமாக ஆமென்.