யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் திங்கட்கிழமை
2018-02-12




முதல் வாசகம்

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது: என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும். தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே, கிடைப்பதாக.
திருப்பாடல் 119: 67-68. 71-72. 75-76

67 நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். பல்லவி

71 எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி

75 ஆண்டவரே! உம் நீதித் தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே. 76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13

அக்காலத்தில் பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ``இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்'' (மாற்கு 8:11)

மனிதருக்கு நலம் கொணர்வதற்காக இயேசு புதுமைகள் பல செய்தார் என மாற்கு பதிவுசெய்துள்ளார். இயேசு புரிந்த புதுமைகளையும் அரும்செயல்களையும் அவருடைய சீடர்களும் பிறரும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் உடனேயே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டார்கள் என்று கூற முடியாது. சிலர் அரும்செயல்களைக் கண்டபிறகும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. பரிசேயர் இவ்வாறு நம்பிக்கை கொள்ளாதிருந்தனர் என்கிறார் மாற்கு. அவர்கள் இயேசுவோடு ''வாதாடத் தொடங்குகிறார்கள்''. அதோடு அவரைச் ''சோதிக்கிறார்கள்''. பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்தது சாத்தான் (மாற் 1:13). இங்கோ அவரைச் சோதிப்பவர்கள் பரிசேயர். அவர்கள் இயேசுவிடம் ''வானத்திலிருந்து அடையாளம்'' வேண்டும் எனக் கேட்கின்றார்கள். இது புதுமையான கேள்விதான்! இயேசு ஏற்கெனவே எத்தனையோ அடையாளங்களைக் காட்டிவிட்டார்: நோயாளருக்குக் குணம் நல்குவதும், பசித்த மக்களுக்கு உணவளிப்பதும், பார்வையற்றோர்க்குப் பார்வை வழங்குவதும் என பல வகைகளில் இயேசு அரும்செயல்களை நிகழ்த்தியிருந்தார். ஆனால் பரிசேயர் இயேசு ஆற்றிய அரும் செயல்கள் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது ''வானத்திலிருந்து ஓர் அடையாளம்''.

பரிசேயரின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார் இயேசு. அதிசய செயல்களைப் பார்த்து இயேசுவை ஏற்பவர்கள் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இயேசுவிடத்தில் உண்மையான நம்பிக்கை கொள்கின்ற மனிதர்கள் அதிசயங்களின் அடிப்படையில் நம்பிக்கை கொள்வதில்லை. மனித கற்பனையில் கடவுள் இவ்வாறு இவ்வாறு இருக்க வேண்டும் என அவர்கள் தீர்மானிக்காமல், கடவுளின் சொல்லை ஏற்று அவரிடத்திலும் அவர் அனுப்பிய இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வார்கள். புதுமைகளைத் தேடிச் செல்வோர் ஏமாற்றமடைவர். ஏனென்றால் புதுமைகளுக்குள் கடவுளை அடக்கிவிடலாம் என்றோ, ஒருசில உத்திகளைப் பயன்படுத்தி கடவுளைக் கைவசப்படுத்திவிடலாம் என்றோ நாம் நினைத்தால் அது உண்மையான நம்பிக்கைக்கு எதிரான போக்காகவே இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, அதிசயங்களை நாடாமல் ஆழமான நம்பிக்கையை நாட எங்களுக்கு அருள்தாரும்.