யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-02-04

(இன்றைய வாசகங்கள்: யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7,திபா 147: 1-2. 3-4. 5-6,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39)




நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். 
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்கா கவே நான் வந்திருக்கிறேன் நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். 
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்கா கவே நான் வந்திருக்கிறேன் நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். 
அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்கா கவே நான் வந்திருக்கிறேன்


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் முற்றிலும் உரிய சகோதரர்களே சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

படைப்பிற்கெல்லாம் சிறந்த படைப்பாக மனிதனை உருவாக்கிய இறைவன் அவருடைய சாயலை மனித உருவில் வைத்தார். அதனால்தான் மற்ற உயிரினங்களை விட மனிதர்மேல் அதிக அன்பு வைத்து இந்த மண்ணுலகை ஆள மனிதனைப் பணித்தார். அதற்கேற்றவகையில் பகுத்தறியும் ஆற்றலும், பலவகைத் திறன்களும் அவனுள் இருக்கச் செய்தார். இந்த திறன்களால் ஒருவர் ஒருவரை விஞ்சி நிற்காமல்; சமநிலை ஏற்பட ஒருவர் ஒருவருக்கு உதவுதல் எனும் பணிபுரிதலின்மூலமும், அதற்குக் காரணமாக இறை உறவைக் கொண்டிருத்தலின் மூலமும் தன் பணித்திட்டத்தை நிறைவேற்றச் செய்கிறார். ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் வாரத்தில் இறைமக்கள் இந்த சிந்தனைகளை மனதில் இருத்தி இறை உறவுடன் மக்கள் நலப் பணிசெய்து வாழ திருச்சபை நம்மை அழைக்கிறது. தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்து; கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ (லூக்கா 2:52) இப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்
திபா 147: 1-2. 3-4. 5-6

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. 2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். 4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். பல்லவி

5 நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. 6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெற வேண்டி, நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ``எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு அவர், ``நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

02. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே,

நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

03. இரக்கமுள்ள இறைவா!

இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் அன்பை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் உற்றார் உறவினார்கள் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

04. உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்தி, அவர்களின் காயங்களைக் குணமாக்குகின்ற தந்தையே இறைவா!

வேதனை, பழிவாங்கும் உணர்வு, விட்டுக் கொடுக்காமை, புரிந்துணர்வின்மை, பிரிந்து வாழும் மனநிலை, வன்முறை ஆகிய தீமைகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரையும் குணப்படுத்தி, அவர்கள் மத்தியில் நிலையான அன்பும், உறவும் உருவாகிட, அவர்களை ஆட்கொண்டு வழிநடாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

05. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா!

நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

06. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலஉலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

07. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா!

இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

08. எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீமோனுடைய மாமியார் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்'' (மாற்கு 1:31)

இயேசு இறையாட்சிப் பணி ஆற்றிய இடங்களில் முக்கியமான ஒன்று கப்பர்நாகும் ஊர் ஆகும். அங்கே சீமோன் பேதுருவின் வீடு இருந்தது. இயேசு அங்குச் செல்வது வழக்கம். சீமோனுடைய மாமியாருக்குக் காய்ச்சல். இயேசு நோயாளருக்கு நலமளிக்கிறார் என்னும் செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது (காண்க: மாற் 1:27-28). எனவே, சீமோனுடைய மாமியாருக்கு நலமளிக்க வேண்டும் என இயேசுவைக் கேட்கிறார்கள். இயேசு கையைப் பிடித்து அவரைத் தூக்கவே காய்ச்சல் நீங்குகிறது. நலம் பெற்ற அப்பெண்மணி இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் ''பணிவிடை செய்தார்'' (மாற் 1:31). இங்குப் பணிவிடை எனக் குறிக்கப்படுவது ஏதோ உணவு பரிமாறியது மட்டுமல்ல. திருச்சபைச் சமூகத்தில் ஒருவர் மற்றவர் மட்டில் அன்புகொண்டு அவர்களைத் தம் குடும்ப உறுப்பினர்போல ஏற்று மதித்து ஒழுகுவதே ''பணிவிடை''. இத்தகைய பணிவிடை (''தொண்டு'') செய்யவே இயேசு இவ்வுலகில் வந்தார் (மாற் 10:45).

இயேசுவின் மீட்புப் பணி நம்மைத் தீமையிலிருந்து விடுவிப்பதோடு நாம் பிறரை முழு மனத்தோடு அன்புசெய்ய நமக்கு சக்தியையும் வழங்குகிறது. சீமோனின் மாமியார் இதற்கு ஒரு முன்மாதிரி எனலாம். அவருக்கு ஏற்பட்ட ''தீமை'' காய்ச்சலாக வெளிப்பட்டது. அத்தீமையிலிருந்து அவர் விடுதலை பெற்றது இயேசுவை அவர் சந்தித்து, அவரால் தொடப்பட்ட நேரம் நிகழ்ந்தது. இவ்வாறு நலம் பெற்ற அவர் ஒரு புதிய மனிதராக மாறுகிறார். இயேசுவுக்கும் அவரில் நம்பிக்கைகொண்டோருக்கும் ''பணிவிடை'' செய்ய அவர் திறம் பெறுகிறார். நாமும் நலம் பெற்ற மனிதராக, பிறருக்கு நலம் கொணரும் மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் பணிசெய்திட அருள்தாரும்.