யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-01-28

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இ.ச 18:15-20),திருப்பாடல்கள்: 95: 1-2, 6-9 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:32-35,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28)




காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். 
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். 
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். 
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புநிறை சகோதரர்களே சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரத்திலிருக்கும் நாம் இன்று சிறப்பாக இயேசுவின் பணியைத் தொடர்ந்தாற்ற அழைக்கப்படுகிறோம். இந்த சிறப்பு நிலையைப் பெற இன்றைய இறை வாக்குகளின் ஊடாக நம் சிந்தனைகளை செலுத்த விழைவோம்.

இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்” என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

ஓர் இறைவாக்கினனை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.
இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இ.ச 18:15-20)

அந்நாள்களில், மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னைநோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார். உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-9

வாருங்கள். ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள். நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி:

வாருங்கள். தாள்பணிந்து அவரைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள். நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி:

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர். என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதி த்துப் பார்த்தனர் பல்லவி:

இரண்டாம் வாசகம்

கன்னிப்பெண்; தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கின்றார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:32-35

சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இம்முறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா!

உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

02. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே,

நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும, பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்தரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

03. இரக்கமுள்ள இறைவா!

எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புசெய்து வாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

04. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

திருஅவையின் அச்சாணிகளாய் இளைஞர்களை உருவாக்க அவர்களின் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறவும், தம் தூயவாழ்வால் இவ்வுலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்ற இயேசுவின் சீடர்களாய் மாறிடத் தேவையான ஞானத்தையும், திறமைகளையும், மன உறுதியையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

05. அரவணைக்கும் தந்தையே! எம் இறைவா!

எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் நினிவே மக்களைப் போல் மனமாறி இவ்வுலக நாட்டங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டு புதுவாழ்வுப் பெற்றிட உம்மில் என்றும் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

06. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலஉலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

07. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா!

இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

08. எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''நீர் யாரென எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற்கு 1:24)

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் நிகழ்வது குறிக்கப்படுகிறது. தீய ஆவியை இயேசு துரத்துகிறார். ஆனால் அந்த ஆவி இயேசு யார் என்பது குறித்துச் சான்று பகர்கிறது. ''நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' (மாற் 1:24) என்னும் சொற்கள் தீய ஆவியின் வாயிலிருந்து புறப்பட்டதாக மாற்கு எடுத்துரைக்கிறார். இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்னும் உண்மையை இயேசுவின் சீடரே படிப்படியாகத்தான் அறிந்துகொண்டார்கள். ஆனால் தீய ஆவியோ இயேசு யார் என்பதை அறிக்கையிட முந்திக்கொள்கிறது. இவ்வாறு இயேசு பற்றிய தகவலைத் தீய ஆவி அறிக்கையிட்டபோது இயேசு அதைக் கடிந்துகொள்கிறார். ''வாயை மூடு'' என இயேசு கடுமையாகக் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் அறியும் முக்கிய கருத்து இயேசு பற்றிய நம்பிக்கை அறிக்கை மனிதரின் வாயிலிருந்து வெளிவர வேண்டும் என்பதாகும். தீய ஆவியின் அறிக்கை ஒரு தகவலாக இருக்கலாமே ஒழிய, கடவுளின் திட்டத்தை ஏற்றுப் பணிகின்ற பண்பு தீய ஆவிக்கு இல்லை. மாறாக, மனிதரின் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இயேசுவின் பணி நோக்கம். மனிதர் உள்ளத்தில் மாற்றம் பெற்று, கடவுளின் வெளிப்பாட்டை ஏற்று, அவர் அனுப்பிய அவர்தம் மகனில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்நோக்கம் நிறைவேறும்போது இயேசுவின் பணி நம்மில் பயன் நல்குகிறது என நாம் கூறலாம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறியவும் அவர் அறிவிக்கின்ற நற்செய்தியை ஏற்கவும் எங்களுக்கு அருள்தாரும்.