யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2018-01-21

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம். (யோனா.3:1-5,10),திருப்பாடல்கள்: திபா 25: 4-5, 6-7, 8-9 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:29-31,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20)




இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. 'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இன்று நாம் பொதுக்கால மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா? நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம். (யோனா.3:1-5,10)

அந்நாள்களில், இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்.
திருப்பாடல்கள்: திபா 25: 4-5, 6-7, 8-9

4.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்: பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.: பல்லவி

இரண்டாம் வாசகம்

இந்த உலக அமைப்பு கடந்து போகக் கூடியது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7:29-31

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. 'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்". அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

01. நல்லாசிரியராம் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : உம் பாதைகளை அவர்கள் அறியச்செய்தருளும். உம் வழிகளை அவர்களுக்குக்; கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் அவர்களை நடத்தி அவர்களுக்குக் கற்பித்தருளும். அதன் வழியாக அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைத்தலுக்கு ஏற்ப பிரமாணிக்கமாய் வாழ்ந்திட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

02. ‘உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா,

என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

03. ‘விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது’ என்று உரைத்த இறைவா,

சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும், ஞானத்திலும், பக்தியிலும் வளரவும், உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

04. பிரிவுற்ற அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியை உருவாக்கும் தந்தையே.

நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருந்து. எங்களிடையே உள்ள பிளவுகளைத் தவிர்த்து, கிறீஸ்துவுக்குள் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டு, உமக்குகந்த அன்பிய சமூகமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

05. ஒளியும், மீட்புமான தந்தையே இறைவா!

எமது இளைஞர்களுக்கு நீர் ஒளியாகவும், வழியாகவும் இருந்து வழிகாட்டி, உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

06. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!

திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலஉலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

07. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா!

இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

08. எம்மை அரவணைக்கும் எம் இறைவா!

இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்'' (மாற்கு 1:18)

இயேசு தம்மோடு இருப்பதற்கும், தாம் ஆற்றவந்த நற்செய்திப் பணியைத் தொடர்வதற்கும் சீடர்களை அழைத்தார். வழக்கமாக சீடர்கள் குருவை நாடிச் செல்வார்கள். இங்கே சீடர்களைத் தேடிச்செல்கிறார் குரு. இயேசு யாரைத் தம் சீடர்களாகத் தேர்ந்துகொண்டார் என்பதை நாம் அலசிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெளிவாகிறது. அன்றைய பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த சாதாரண மனிதரையே இயேசு தேர்ந்துகொண்டார். அவர்களில் பலர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தம் தொழிலைச் செய்வதில் கவனமாக இருந்தவர்கள் தங்கள் வலைகளையும் பிற கருவிகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் (மாற் 1:18). இது ஒரு பெரிய அதிசயம்தான். ஆனால் அவர்களை அழைத்தவர் ஓர் அதிசய மனிதர்தானே!

இயேசுவின் அழைப்பைப் பெற்ற மீனவர்களான சீமோனும் அந்திரேயாவும் தயக்கமின்றி இயேசுவைப் பின்தொடர்ந்தனர். மீன்பிடிப்பதற்கு மாறாக ''மனிதரைப் பிடிக்கும்'' திறமையை அவர்களுக்குக் கொடுத்தார் இயேசு. அதாவது, கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அந்த அறிவிப்பின் வழியாக வேறு பல மனிதர்களை இயேசுவின் அணைப்பில் கொணர்கின்ற பணியைச் சீடர்கள் பெற்றார்கள். இதுவே இன்றைய கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் தம்மை முழுவதும் அவரிடம் கையளித்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை மனமுவந்து பின்பற்றிட எங்களுக்கு அருள்தாரும்.