யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 6ஆம் நாள் 1வது வாரம் சனிக்கிழமை
2017-12-30




முதல் வாசகம்

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-17

என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப் பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதுகிறேன். சிறுவரே, நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்; இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது; தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது. ஏனெனில் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை. உலகம் மறைந்து போகிறது; அதன் தீய நாட்டங்களும் மறைந்துபோகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
திருப்பாடல் 96: 7-8. 8-9. 10

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். பல்லவி

8b உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில், உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 36-40

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அன்னா கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்'' (லூக்கா 2:37)

அன்னா என்னும் இறைவாக்கினர் கோவிலில் திருப்பணி செய்துவந்தார் என்னும் செய்தியை லூக்கா தருவதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. லூக்கா நற்செய்தியில் பெண்களுக்குத் தனி இடம் உண்டு. அவர்கள் கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப ஒழுகுவதில் நிலைத்திருந்தார்கள் எனவும், கடவுளுக்கு அஞ்சி நடந்து, கடவுளாட்சியின் கோரிக்கைகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொண்டார்கள் என்றும் லூக்கா தம் நற்செய்தி நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். கோவிலை விட்டு அன்னா நீங்காதிருந்தார்; அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார் (லூக் 2:37). அன்னா புரிந்த திருப்பணி எதில் அடங்கியிருந்தது எனத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. ஆனால், அந்த திருப்பணி கோவில் வழிபாட்டோடு தொடர்புடைய ஒன்றே. கடவுளை வழிபடுவதற்கு ஒரு சிலரால் மட்டுமே இயலும் என்னும் கொள்கை இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கடவுளை அணுகிச் செல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு.

அன்னா நோன்பிருந்தார் எனவும் லூக்கா கூறுகின்றார். பலிகளில் கலந்துகொள்வதோடு நோன்பிருத்தலும் கடவுளின் மட்டில் பக்தியை வெளிப்படுத்துகின்ற செயலாகக் கருதப்பட்டது. நோன்பிருக்கும் பழக்கம் சமயம் சார்ந்த வழக்காக நெடுங்காலம் இருந்துவந்துள்ளது. நோன்பின் வழியாக அடியார்கள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் ஒறுத்து, கடவுளுக்குத் தம் உள்ளத்திலும் வாழ்விலும் முழு இடத்தை அளிக்க முன்வருகின்றனர். நோன்பு எப்போதுமே சமுதாய அர்த்தம் கொண்ட ஒரு செயலாகத்தான் இருக்கமுடியும். நோன்பின் வழி நம்மை ஒறுக்கும்போது அதன் பயனாகப் பிறர் பயனுற வேண்டும் என்னும் சிந்தனையும் நம்மிடமிருந்து அகன்றுவிடலாகாது. இவ்வாறு நோன்பு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும்; நமக்கு நன்மை பயக்கும்; பிறருக்கு நாம் உதவிட நமக்கு வழியாகவும் அமையும். அன்னா மீட்பின் அனுபவம் பெற்றதுபோல நாமும் நம்பிக்கையின் அடியில் எழுகின்ற இறை அனுபவத்தைப் பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உமக்குப் பணிபுரிவதில் நாங்கள் நிலைத்துநிற்க அருள்தாரும்.