யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
கிறீஸ்துபிறப்புக்காலம்
2017-12-26

புனித ஸ்தேவான்




முதல் வாசகம்

இதோ, வானம் திறந்திருப்பதைக் காண்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, ``இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்'' என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், ``ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' என்று வேண்டிக் கொண்டார்.பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ``ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்'' என்று சொல்லி உயிர்விட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
திருப்பாடல் 31: 2-3. 5,7. 15-16

எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். 7யb உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். பல்லவி

15b என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். 16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: ``எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்'' (மத்தேயு 10:18)

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பின் இயேசுவின் பெயரால் கூடி வந்த சமூகம் சந்தித்த கொடுமைகள் பல. யூதர்கள் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு இயேசுவை ஏற்றவர்கள் யூத சமய அமைப்புக்குப் புறம்பாக்கப்பட்டார்கள். பிற இனத்தார் நடுவிலேயும் கிறிஸ்தவம் பரவலாயிற்று. ஆனால் அங்கேயும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ஆக, கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் தாங்கள் அனுபவித்த துன்பங்களின் நடுவே சான்று பகர அழைக்கப்பட்டனர். இச்சான்று அவர்களுடைய வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும்கூட வெளிப்பட்டது. இயேசுவே கடவுளுக்காக வாழ்ந்து, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதில் நிலைத்துநின்று, இறுதிவரை ''சான்று பகர்ந்தார்''. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்வோரும் சான்று பகர அழைக்கப்படுகின்றனர்.

இன்றைய உலகில் ''சான்று பகர்தல்'' எதில் அடங்கியுள்ளது? ஒரு சிலர் கடவுள் தங்களுக்கு இன்னின்ன நோய்நோக்காடுகளிலிருந்து விடுதலை தந்தார், இன்னின்ன கவலைகளைப் போக்கினார் என்று பிறர் முன்னிலையில் வெளிப்படையாக அறிக்கையிடுவதை மட்டுமே ''சான்று பகர்தல்'' எனப் புரிந்துகொள்வர். இது முற்றிலும் தவறு என்பதற்கில்லை. ஆனால், சான்று பகர்தல் என்பது இதைவிடவும் விரிந்தது, ஆழமானது. அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கிறிஸ்துவின் மன நிலையைப் பிரதிபலிப்பதுதான் உண்மையான சான்றுபகர்தல் ஆகும். இது எவ்வாறு நிகழும் என்று சிலர் கேட்கலாம். நம் வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்கின்ற விதத்தில், அவற்றை எதிர்கொண்டு உள்வாங்குகின்ற முறையில் நமது ஆழ்ந்த மனப்பாங்குகளும் சிந்தனை முறைகளும் வெளிப்படுவதுண்டு. கிறிஸ்துவின் உணர்வால் நிறைந்தோர் கிறிஸ்துவையே தங்கள் வாழ்வின் ஊற்றாகக் கொள்வர். அப்போது அவர்களும் ''கிறிஸ்து என்னில் வாழ்கிறார்'' என்று உறுதியாகக் கூறிட இயலும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை முழுவதும் உம் அன்புக்குச் சான்றாக அமைந்திட அருள்தாரும்.