யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2017-12-16




முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
திருப்பாடல்80: 12. 14-15. 17-18

12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! பல்லவி

13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! பல்லவி

15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித்; தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! பல்லவி

18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி

19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை. � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகனையும் மக்கள் துன்புறுத்துவார்கள்' என்றார்'' (மத்தேயு 17:13)

இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர் யோவான். அவருடைய அழைப்பை ஏற்றுப் பலர் மனம் திரும்பினர்; திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் வேறு பலர் அவரையும் அவர் அறிவித்த செய்தியையும் ஏற்க முன்வரவில்லை. முற்காலத்தில் இறைவாக்கினர் துன்புறுத்தப்பட்டது போல யோவானும் துன்புறுத்தப்பட்டார்; கொலைசெய்யப்பட்டார். இதை இயேசு மக்களுக்கு எடுத்துக் கூறினார். யோவானைப் பார்த்த மக்களில் பலர் பண்டைக்கால இறைவாக்கினருள் பேர்பெற்றவராக விளங்கிய எலியா இறைவாக்கினர் மீண்டும் யோவானாக வந்திருக்கிறார் என மக்கள் நினைத்ததுண்டு. இயேசு இக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக, யோவானுக்கு நேர்ந்த துன்பமும் சாவும் தமக்கும் நிகழக்கு கூடும் என்பதை அவர் முன்னுணரத் தொடங்கினார்: ''மானிட மகனையும் மக்கள் துன்புறுத்துவார்கள்'' (மத் 17:13).

இயேசுவின் வாழ்வில் துன்பம் இணைபிரியாத் தோழனாயிற்று. அவர் பிறப்பதற்கு ஒரு ''தீவனத் தொட்டி''தான் கிடைத்தது (காண்க: லூக் 2:7). அவருடைய போதனை அக்கால யூத சமயக் கருத்துக்களுக்கு எதிராக அமைந்தது என அவரைப் பழித்தவர்கள் இருந்தார்கள்; அவரை ஒரு மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சி செய்தார்கள் (காண்க: லூக் 4:29). இறுதியாக, அவரை ஒரு கைதிபோலப் பிடித்து, கசையால் அடித்து, சிலுவை சுமக்கச் செய்து, அச்சிலுவையிலேயே அறைந்து கொன்றார்கள். இவ்வாறு இயேசு பல துன்பங்கள் அனுபவித்தார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வருகிறது என்னும் நற்செய்தியை அறிவித்துக்கொண்டே சென்றால் தமக்குப் பலவித துன்பங்கள் ஏற்படும் என்பதை ஒருவிதத்தில் இயேசு முன்னுணர்ந்திருக்க வேண்டும். அப்படி இருந்த போதிலும், அவர் தம் கடமையிலிருந்து தவறவில்லை. தமக்குத் தந்தை தந்த பணியைத் தவறாமல் ஆற்றுவதில் அவர் நிலைத்திருந்தார். நம் வாழ்விலும் கடவுள் நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்கும்போது நமக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடும். அவற்றைத் தாங்கிக் கொண்டு இறையாட்சியின் வருகையில் நம்பிக்கை கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாதிருக்க எங்களுக்கு அருள்தாரும்.