திருவழிபாடு ஆண்டு - B 2017-12-03
திருவருகைக்காலம்
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8 ,திருப்பாடல்: 80:1-2,14-15,17-18,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 1:3-9,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37)
திருப்பலி முன்னுரை
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று திருவருகைக் காலம் முதல் ஞாயிறு. அருளும் அமைதியும் வழங்கும் ஆண்டவரின் அன்புப் பிரசன்னத்தில் ஒரே குடும்பமாக ஒன்று கூடியுள்ளோம்.
இன்று தாய் திருஅவை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது.
நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
நம்முடைய நற்செயல்கள், முன்மாதிரிகையான வாழ்கை ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக நம்பிக்கையோடும், தூய வாழ்வோடும் காத்திருக்கும் நமக்கு அருள்கொடை எதிலும் குறைவே இல்லை என்பதும், நாம் எல்லா வகையிலும் செல்வர்களாவோம் என்னும் நற்செய்தியும் இன்று நமக்கு வழங்கப்படுகின்றது. எப்பொழுதும் கடவுளைச் சந்திக்கத் தயாராய் இருக்கவேண்டும், நமது பாவ வாழ்வை ஏற்றுக் கொண்டு மனமாற்றத்திற்கான வழிகளைத் கண்டடைய வேண்டும் என்ற சிந்தனைகளும், நமக்குத் தரப்படுகின்றன.
இந்தச் சிந்தனைகளை நாம் நம் மனத்தில் ஆழமாகப் பதித்து, ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே, எங்கள் பாவங்களிலிருந்து எம்மை விடுவித்து, புனித பாதையில் வழி நடக்க வரம் தாரும்: என்று இத் திருப்பலி வழியாகச் செபிப்போம்.
முதல் வாசகம்
உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 16-17; 64: 1,3-8
ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை; பண்டைய நாளிலிருந்து `எம் மீட்பர்' என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வது ஏன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியது ஏன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நீர் இறங்கி வந்தீர்; மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதும் இல்லை. கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர். இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
திருப்பாடல்: 80:1-2,14-15,17-18
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி:
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்: இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி:
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்: எமக்கு வாழ்வு அளித்தருளும்: நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.! பல்லவி:
இரண்டாம் வாசகம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படவேண்டும் எனக் காத்திருக்கின்றோம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 1:3-9சகோதரர் சகோதரிகளே, நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப் பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 33-37
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர் தம் வீட்டை விட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாய் இருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. கெருபுகளின் மீது வீற்றிருப்பவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: அவர்கள் அனைவரும் ஆன்மிக வாழ்விற்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக வரும் அனைத்துத் தீய சக்திகளையும் முறியடித்து, அவைகள் மட்டில் எப்பொழுதும் கவனமாயிருக்கவும்;, விழிப்பாயிருக்கவும்;, விவேகத்தோடு செயற்படவும் வேண்டிய அருளாற்றலை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் தந்தையே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் உமக்கெதிராகப் பாவம் செய்தோம், தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம், எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆகிவிட்டன என்னும் எங்கள் சமகால வாழ்வைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு மனமாற்றம் பெற்று வாழ்ந்திடும் அருளை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. பேரன்பையும், மீட்பையும் கொண்டுள்ள தந்தையே இறைவா! நோயினால் தாக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ இல்லங்களிலுமிருந்து வேதனையுறும் அனைவரினதும் நோயைக் குணமாக்கி மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பேராற்றலையும், நிறை ஞானத்தையும் உடையவரான தந்தையே இறைவா! இன்று உலகிலே புதியவற்றைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் அனைவரும் மனித நலத்திற்கும், மனித ஒழுக்கத்திற்கும், இயற்கையின் சீரான வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அனைத்தையும் தயாரிக்கும் ஞானத்தையும், மனப் பக்குவத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|