யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் வியாழக்கிழமை
2017-11-30

புனித அந்திரேயா - திருத்தூதர் விழா




முதல் வாசகம்

அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10: 9-18

சகோதரர் சகோதரிகளே, `இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். ஏனெனில், ``அவர்மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்'' என்பது மறைநூல் கூற்று. இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை; அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். ``ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்'' என்று எழுதியுள்ளது அல்லவா? ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்று பற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்? இதைப் பற்றியே, ``நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் குறித்தே எசாயா, ``ஆண்டவரே, நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?'' என்று முறையிடுகிறார். ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. அப்படியானால், அவர்கள் கேள்விப்படவில்லை என்று சொல்ல முடியுமோ? எப்படிச் சொல்ல முடியும்? ஏனெனில், ``அவர்களது அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவர்கள் கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். � இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார்'' (மத்தேயு 4:19)

இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தபோது அவர்கள் தம்மைப் பின்செல்ல வேண்டும் எனக் கேட்டார். இவ்வாறு இயேசு விடுத்த அழைப்பைச் சிலர் ஏற்றனர்; சிலர் ஏற்கவில்லை. ஆயினும் ஒருசில மனிதரை இயேசு தனிப்பட்ட முறையில் அழைத்தார் என எல்லா நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 4:18-22; மாற் 1:15-20; லூக் 5:1-11; யோவா 1:35-51). இவ்வாறு இயேசு தம் சீடர்களை அழைத்தார் என்பது சிறப்பு வாய்ந்த நிகழ்வுதான். இயேசு வாழ்ந்த காலத்தில் பல யூத குருக்களும் அறிஞர்களும் யூத சமய நெறியை மக்களுக்கு விளக்கியுரைத்தனர். அவர்களிடம் பாடம் கற்க விரும்பியோர் அந்த அறிஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் சீடர்களாகச் சேர்ந்தார்கள். ஆனால் இயேசுவோ தம்மோடு நெருங்கிய விதத்தில் ஒத்துழைப்பதற்காகப் பன்னிருவரைத் தாமே அழைக்கின்றார். அவர்களுக்குத் ''திருத்தூதர்'' (அப்போஸ்தலர்) என்னும் பெயரையும் அளிக்கின்றார். இது ஒருவேளை தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். கிரேக்க மொழியில் ''அப்போஸ்தலர்'' என வரும் சொல் ''அனுப்பப்பட்டவர்'' (''தூதர்'') என்னும் பொருளைத் தரும். கடவுள் அளிக்கின்ற பணியை நிறைவேற்ற ''வான தூதர்'' இருப்பதுபோல இயேசு அளித்த பணியை நிறைவேற்ற ''திருத்தூதர்'' தெரிந்துகொள்ளப்பட்டனர். இவர்கள் ஆற்றவேண்டிய பணி யாது? அவர்கள் இயேசுவிடமிருந்து பெற்ற பணி ''மனிதரைப் பிடிப்பது''. இங்கே இயேசு திறமையான விதத்தில் சொல் விளக்கம் தருவது தெரிகிறது. அதாவது இதுவரை ''மீன்களைப் பிடித்தவர்கள்'' இனிமேல் ''மனிதர்களைப் பிடிப்பார்கள்'' என்னும் சொல்லாடல் படித்து இன்புறத் தக்கது (மத் 4:19).

மனிதரைப் ''பிடிப்பது'' எப்படி? மீன் பிடிப்பவர்கள் கடலில் அல்லது ஏரியில் வலைவீசுவார்கள். அதுபோல இயேசுவின் சீடர்களும் உலகு என்னும் கடலில் வலைவீச வேண்டும். அந்த வலை இயேசு நமக்குத் தருகின்ற இறையாட்சிப் போதனையே. இயேசுவின் போதனையை நாம் சொல்லளவில் மட்டுமே எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்விலும் எண்பிக்கும்போது நாம் வீசுகின்ற வலை உறுதியாய் இருக்கும். அந்த வலையில் வந்துசேர்கின்ற மனிதரை நாம் கவனமாகக் கரை சேர்க்க வேண்டும். கரையில் நமக்காகக் காத்திருக்கிறார் இயேசு. இங்கே யோவான் நற்செய்தியில் வரும் நிகழ்ச்சி கருதத்தக்கது. ''ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை'' (யோவா 21:4). இருளின் ஆட்சி முடிகின்ற வேளையில், கதிரவன் வீசுகின்ற ஒளியைப் போல காலைவேளையில் தோன்றுகிறார் இயேசு. அவர் ''கரையில்'' நிற்கிறார். நமக்காகக் காத்திருக்கிறார். ஆனால் நாம் அவரை உடனே அடையாளம் காண்பதில்லை. ஏனென்றால் ஒளிமயமான அவருடைய தோற்றம் நம் கண்களைக் கூசச் செய்கிறது. இருப்பினும், கரைநோக்கி நாம் வரும்போது அவரை அடையாளம் காண்கின்றோம். அவர் மாட்சியோடு விளங்குகின்ற இயேசு என அறிகின்றோம். நாம் பிடித்துவந்த மீன்களை அவரிடம் காணிக்கையாக்குகின்றோம். இயேசுவிடம் மனிதர்களை இட்டுச் செல்கின்ற பணி மாண்புமிக்கதொரு செயல். எனவே இயேசுவுக்காக ''மனிதரைப் பிடிப்பவர்'' ஆவோம்; அவரில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்களாக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, வலைவீசி மனிதரைப் பிடித்து உம்மிடம் அழைத்துவர எங்களுக்கு நீர் அளித்த பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.