யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் புதன்கிழமை
2017-11-08




முதல் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்
திருப்பாடல்கள் 112: 1-2. 4-5. 9

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ``என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது'' (லூக்கா 14:33)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தம் உடைமைகளை விட்டுவிட வேண்டும் என்பது சிலருக்குக் கடினமான ஒரு போதனையாகத் தோன்றலாம். மனிதருடைய உள்ளத்தில் இடம் பிடித்துக்கொள்கின்ற எதுவும் அவரைத் தமக்கு அடிமையாக்க முயற்சி செய்யக் கூடும். பொருள், உறவு, குடும்பம் போன்ற தளைகள் நம்மை இறுகப் பிணைத்துவிட்டால் கடவுளோடு நமக்குள்ள உறவு முறிவதற்கான ஆபத்து எழக் கூடும். இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் வேறு எந்த பொருளுக்கோ மனித ஆளுக்கோ நாம் முதன்மையிடம் அளித்தலாகாது. இதனால் நம் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் நாம் ''வெறுக்கவேண்டும்'' என்று பொருளாகாது. ஆனால், மனித உறவு எதுவும் கடவுளின் உறவுக்கு அடுத்த படியில்தான் அமைய வேண்டுமே ஒழிய அதை முந்திவிடக் கூடாது. இதையே இயேசு போதிக்கிறார்.

நம் உயிர் மட்டில் நமக்குப் பற்று இருப்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் ஒன்றில் நாம் அந்த ஆபத்தை எதிர்த்துப் போராடுவோம், அல்லது அந்த ஆபத்திலிருந்து தப்பித்து ஓடிப்போவோம். ஆனால் இயேசு நம் உயிர்மட்டில் நமக்கு இருக்கின்ற பற்றினைவிட அதிகப் பற்றோடு நாம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார். இதற்கு ஒரு காரணம் நம் உயிரே கடவுளின் கொடை என்பதுதான். கடவுளிடமிருந்தே அனைத்தையும் நாம் கொடையாகப் பெற்றுக்கொள்வதால் கொடையைத் தருகின்ற வள்ளலை நாம் ஏற்கும்போது அவர் தருகின்ற கொடைகளையும் நன்றியோடு ஏற்போம். ஆனால், நாம் பெறுகின்ற கொடையே அக்கொடையை நமக்கு அளித்தவரின் இடத்தைப் பிடித்துக்கொள்ளா விதத்தில் நாம் கவனமாக இருத்தல் வேண்டும். பொருளையும் உறவையும் குடும்பத்தையும் நட்பையும் இயேசுவின் பொருட்டுத் துறந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் வகையில் இயேசு ''நாம் நம் சிலுவையைச் சுமந்துகொண்டு அவர்பின் செல்ல'' நம்மை அழைக்கிறார் (காண்க: லூக்கா 14:27). இயேசுவின் சிலுவை என்பது இயேசு அனுபவித்த துன்பத்திற்கு அடையாளம்; அதுவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பத்திற்கும் அடையாளம். ஆக, இயேசுவின் பின் செல்ல வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் பற்றற்ற நிலை உருவாக வேண்டும்; அதே நேரத்தில் கடவுளிடத்தில் நம் பற்று வளர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவைப் பின்செல்வதில் நாங்கள் நிலையாய் இருக்க அருள்தாரும்.