யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-10-17




முதல் வாசகம்

இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது;
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25

சகோதரர் சகோதரிகளே, நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. ஏனெனில் ``நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்'' என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
திருப்பாடல்கள் 19: 1-2. 3-4

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. -பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம்11;47-54

37 இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 38 உணவு அருந்து முன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். 39 ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது; "பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. 40 அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! 41 உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உணவு அருந்துமுன் இயேசு கைகழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்'' (லூக்கா 11:38)

கைகழுவாமல் உணவு அருந்துவது நோய்கள் பரவுவதற்குக் காரணமாகலாம். எனவே நல வாழ்வு பற்றி அக்கறை கொண்டோர் கைகழுவாமல் உணவு அருந்தமாட்டார்கள். ஆனால், இயேசுவின் காலத்தில் கைகழுவிய பின்னரே உணவு அருந்தவேண்டும் என்பது பரிசேயர் நடுவே நிலவிய ஒரு முக்கியமான சடங்குமுறை ஒழுங்காக இருந்தது. இயேசு யூத சமயத்தில் வேரூயஅp;ன்றியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் வெளிச்சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் நோக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களை இயேசு கடிந்துகொண்டார். வெளிச்சடங்குகள் உள்ளத்தின் உட்கிடக்கையை வெளிப்படுத்துவனவாக மாற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவை பொருளற்றவையே.

சில சமயங்களில் நாம் வெளிச்சடங்குகள் சரியாக நடந்துவிட்டால் எல்லாம் நலமாக முடிந்தது என நினைத்து நிறைவடைந்துவிடுகிறோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற சிந்தனைகள் தூயவையாக இருக்கவேண்டும். நலமான சிந்தனைகள் எழுகின்ற இடத்தில் பிறருக்கு நலம் பயக்கின்ற செயல்களும் வெளிப்படும். அப்போது வெறும் சடங்குகள் பற்றி நாம் அக்கறை கொள்ளாமல் அச்சடங்குகள் எதைக் குறிக்கின்றன, அவை குறிக்கின்ற உள்கருத்து நலமான வெளிப்படுகிறதா என்னும் கேள்விகளை எழுப்பமுடியும். நலமான சிந்தனையும் அதிலிருந்து பிறக்கின்ற நலமான செயலும் நம் வாழ்வில் துலங்க வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. உள்ளமும் செயலும் நன்மையைக் கனியாக ஈந்தால்தான் முழுமையான மனிதம் மலர்கிறது என நாம் கூறலாம். மனிதம் மலரும் இடத்தில் புனிதம் மணம் வீசும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைக் கழுவித் தூய்மையாக்கவும் நேர்மையாகச் செயலாற்றவும் எங்களுக்கு அருள்தாரும்.