யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-09-26




முதல் வாசகம்

கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள்.
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 6: 7-8, 12b, 14-20

கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடை செய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும். யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கிறேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்க வேண்டும். தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும். இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக் கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப் பணியை முடித்தனர். மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது. இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள். கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக் கிடாய்களையும், நானூறு செம்மறிக் குட்டிகளையும் ஒப்புக்கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக் கணக்கின்படி, பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள். மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி, எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர். மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர். குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்",
திருப்பாடல்கள் 122: 1-2. 3-4

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். - பல்லவி

4 இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை'' (லூக்கா 8:19)

நற்செய்தி நூல்களில் இயேசுவின் ''சகோதரர்கள்'' பற்றிய குறிப்பு வருகிறது. இவர்கள் உண்மையிலேயே மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளா அல்லது மரியா, யோசேப்பு ஆகியோரின் உடன்பிறந்தோருக்குப் பிறந்த பிள்ளைகளா, அல்லது உருவக முறையில் மட்டுமே இயேசுவுக்கு ''சகோதரர்களா''? இக்கேள்விக்கு விவிலிய ஆதார அடிப்படையில் என்ன பதில் அளிப்பது? நம்மில் பலரும் நினைப்பது கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி மரியா இயேசுவின் பிறப்புக்கு முன்னும் பின்னும் கன்னியாக இருந்தார்; புராட்டஸ்டாண்டு சபையினர் மரியாவின் கன்னிமையை ஏற்காமல் மரியாவுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகளே இங்கு ''இயேசுவின் சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு நாம் நினைத்தால் அது சரியல்ல. ஏனென்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் வேறு விளக்கங்கள் தரப்பட்டதும் உண்டு; புராட்டஸ்டாண்டு சபையிலும் வேறு விளக்கங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, புராட்டஸ்டாண்டு சீர்திருத்தத்தைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் (1483-1546), ஜான் கால்வின் (1509-1564) ஆகியோர் மரியா எப்போதும் கன்னியாக இருந்தார் என்னும் உண்மையை மறுக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் பல புராட்டஸ்டாண்டு சபைகளில் மரியாவுக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருந்தனர் என்னும் கருத்து எழலாயிற்று. இருப்பினும் இன்றுகூட ஆங்கிலிக்கன் சபையினரில் ''உயர் பிரிவினர்'' மரியாவின் கன்னிமையை ஏற்பர்.

கத்தோலிக்க சபையில் நிலவுகின்ற முக்கிய விளக்கங்கள் இரண்டு. எப்பிபானியுஸ் (320-403) என்னும் பண்டைய அறிஞர் கருத்துப்படி, இயேசுவின் ''சகோதரர்கள்'' எனக் குறிக்கப்படுவோர் உண்மையில் இயேசுவின் ''ஒன்றுவிட்ட சகோதரர்கள்'' ஆவர். அதாவது, யோசேப்பு மரியாவை மணப்பதற்கு முன் வேறொரு திருமணம் செய்திருந்தார் எனவும், அந்த முதல் மனைவியின் இறப்புக்குமுன் அவர்கள் திருமணத்தின் வழி பிறந்த பிள்ளைகளே இயேசுவின் ''சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் எப்பிபானியுஸ் கருத்துத் தெரிவித்தார். இக்கருத்து கத்தோலிக்க சபையின் கீழைப் பகுதிகளில் பரவலாயிற்று. இக்கருத்து தவிர, தூய எரோணிமுசு என்னும் திருச்சபைத் தந்தை (347-420) இயேசுவின் ''சகோதரர்கள்'' உண்மையிலேயே அவருடைய உடன்பிறப்புகள் அல்ல எனவும், மரியா, யோசேப்பு ஆகியோரின் சகோதர சகோதரிகளின் பிள்ளைகளே ''இயேசுவின் சகோதரர்கள்'' என நற்செய்தி நூல்களில் குறிக்கப்படுகிறார்கள் எனவும் கருத்து வெளியிட்டார். இக்கருத்தையே உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கற்பித்துவந்துள்ளது. ஆக, மரியா இறைவனின் அருளால் கன்னிமை குன்றாமல் காக்கப்பட்டார் என்னும் உண்மைக்கு அடித்தளம் விவிலியத்தில் உள்ளது எனலாம். ஆனால் அதை ஒரு போதனையாக விளக்கி மக்களுக்குப் போதிப்பது திருச்சபை ஆகும். தூய ஆவியின் வல்லமையால் வழிநடத்தப்படுகின்ற திருச்சபை கடவுளின் வார்த்தையை நமக்கு விளக்கி உரைப்பதில் தவறிப் போவதில்லை. இயேசுவைப் பின்செல்லும் மக்கள் ஒரு புதிய ''குடும்ப உறவில்'' பங்கேற்கின்றனர். அங்கே இரத்த உறவு முக்கியமல்ல. எனவேதான் இயேசு, ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார் (லூக் 8:21). இந்த இறைக் குடும்பத்தில் நாம் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளதால் நாம் பேறுபெற்றவர்களே.

மன்றாட்டு:

இறைவா, உம் குடும்பத்தில் எங்களை உறுப்பினராக்கியுள்ளீர் என்பதை உணர்ந்து வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.