யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் புதன்கிழமை
2017-08-23




முதல் வாசகம்

`உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்;
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 9: 6-15

அந்நாள்களில் செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் `சிலைத் தூண் கருவாலி' மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர். இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்றுகொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: ``செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவிகொடுப்பார். மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், `எங்களை அரசாளும்' என்று கூறின. ஒலிவ மரம் அவற்றிடம், `எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக்கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் அத்தி மரத்திடம், `வாரும், எங்களை அரசாளும்' என்றன. அத்தி மரம் அவற்றிடம், `எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் திராட்சைக் கொடியிடம், `வாரும், எங்களை அரசாளும்' என்றன. திராட்சைக் கொடி அவற்றிடம், `தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?' என்றது. மரங்கள் எல்லாம் முட்புதரிடம், `வாரும் எங்களை அரசாளும்' என்றன. முட்புதர் மரங்களிடம், `உண்மையில், உங்கள்மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்' என்றது.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்
திருப்பாடல்கள் 21: 1-2. 3-4. 5-6

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! 2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. பல்லவி

3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர் கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். 4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். பல்லவி

5 நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். 6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16

அக்காலத்தில் இயேசு கூறியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வை யாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:15)

''திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை'' (மத் 20:1-16) எதிர்பாராத முடிவைக் கொண்ட ஓர் அழகிய கதையாக எடுத்துரைக்கப்படுகிறது. நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களுக்கும் ஒரே கூலியை யாரே கொடுப்பர்? அப்படிக் கொடுத்தால் அதிக வேலை செய்தவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என முணுமுணுத்தால் அது தவறில்லை என்றுதானே தோன்றும்? ஆனால் இயேசு கூறிய உவமையில் வருகின்ற நிலக்கிழார் நீதியின் இரும்புப் பிடிக்குள் இருந்து செயல்படவில்லை; மாறாக, இரக்கம், பரிவு என்னும் மதிப்பீடுதான் அவருடைய செயலில் துலங்குகிறது. கடின உழைப்பால் முன்வருகின்ற மனிதரைப் பார்த்து நாம் ஏன் பொறாமைப்படுகிறோம்? பிறருக்கு எல்லாத் திறமைகளும் செல்வங்களும் வசதிகளும் இருக்கின்றன, நமக்கு மட்டும் அவை இல்லையே என ஏங்குவோர் பலருண்டு. ஆனால், இவர்கள் தம் கண்களைத் திறந்துபார்த்தால் என்ன காண்பார்கள்? பிறருக்குத் திறமைகள் இருந்தால் இவர்களுக்கும் வேறு திறமைகள் உண்டு; பிறருக்குச் செல்வம் இருந்தால் இவர்களுக்கும் வேறு செல்வம் உண்டு. ஆனால் இந்த உண்மையை இவர்கள் கண்டுகொள்வதில்லை.

நம்மிடம் இருக்கின்ற திறமைகளையும் செல்வங்களையும் நாம் காண மறுத்துவிட்டு, பிறருடைய திறமைகளையும் செல்வங்களையும் மட்டும் பார்த்து அவர்களைப் பற்றிப் பொறாமை கொள்வதால் என்ன பயன்? நாம் பெற்றுக்கொண்ட அனைத்தும் கடவுளின் கொடையே என நாம் உணர்ந்தால் கடவுள் பிறருக்கு அளித்த கொடை பற்றி நாம் பொறாமை கொள்ளமாட்டோம்; மாறாக, கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். இயேசு கூறிய உவமை வெறும் கதையல்ல. அதில் இறையாட்சி (விண்ணரசு) பற்றிய ஓர் ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது (காண்க: மத் 20:1). அதாவது, விண்ணரசில் நாம் பங்குபெறுவது நமது சொந்த சக்தியாலோ திறமையாலோ அல்ல. அதிகாலையில் எழுந்து நாள்முழுதும் வேலை செய்தோம் என்பதால் மட்டுமே நாம் விண்ணரசில் பங்கேற்றிட இயலாது. விண்ணரசில் நாம் பங்குபெறுவது கடவுளின் அருள்கொடையால்தான். அக்கொடையைக் கடவுளே தாரள மனத்தோடு நமக்கு அருளுகின்றார். கடவுளின் கொடையைப் பெறத் தகுதி பெற்றவர் யார், தகுதியற்றவர் யார் என மனிதர் தங்கள் பாணியில் கணிக்கக் கூடும். ஆனால் தகுதியுள்ளோர் அல்லது தகுதியற்றோர் என உலகக்; கண்ணோட்டத்தில் கருதப்படுகின்ற அனைவருக்குமே கடவுளின் அன்பும் இரக்கமும் எப்போதும் தாராளமாக அளிக்கப்படும் என்பதே இயேசு வழங்கும் நற்செய்தி. கடவுளிடம் உள்ள தாராள மனம் நம்மிடமும் வளர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, தாராள மனப்பான்மையை எங்களுக்குத் தந்தருளும்