யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-08-20

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 56:1, 6-7,பதிலுரைப்பாடல்: திபா: 67: 1-2. 4-5,7 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11:13-15,29-32,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28)




இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.


திருப்பலி முன்னுரை

இரக்கத்துக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம்பிக்கையின் வலிமையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது துன்ப நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற, நம்பிக்கையோடு அவரை தொந்தரவு செய்ய வேண்டுமென இன்றைய நற்செய்தி கற்பிக்கிறது. உதவி தேடிச் சென்ற கானானியப் பெண்ணிடம் இயேசு பாராமுகமாய் நடந்துகொள்வதை காண்கிறோம். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கலாம். அப்போது நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டால், நாம் ஆண்டவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை உணர அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்து வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 56:1, 6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்"ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு " என அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
பதிலுரைப்பாடல்: திபா: 67: 1-2. 4-5,7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி:

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி:

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11:13-15,29-32

சகோதரர் சகோதரிகளே! பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன்.இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன் .யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்: இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்.அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்: அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்: ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்: அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது.ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்: மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்: என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் " எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, " நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் " என வேண்டினர். அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார். அவர் மறுமொழியாக ," பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண், " ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார். இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. இரக்கத்தின் உருவே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்களாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும், உமது வழியை அறிந்துகொண்டும், நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொண்டும், உம்மீது உறுதியான விசுவாசம் கொண்டும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் தந்தையாகிய தந்தையே!

துன்பங்களாலும், துயரங்களாலும், வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் அனைவர்மீதும் இரங்கி, ஆசி வழங்கி, உம் திருமுக ஒளியை அவர்கள்மீது வீசி அமைதியையும், மகிழ்ச்சியையும் அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அனைவருக்கும் இரக்கம் காட்டு அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்கள் அனைவர்மீதும் உமது நிறை ஆசியை வழங்கி! அவர்களை உமது அன்பின் ஆழுகைக்குள் வைத்துக்காத்து வழிநடாத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கத்தின் ஊற்றே இறைவா,

நாங்கள் வகுத்துக்கொண்ட குறுகிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று, உம் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

6. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா,

எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

7. இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா!

இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

8. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா!

இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு மறுமொழியாக, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது''

எதையும் எல்லைக் கோடுகளுக்குள் கொண்டுவந்து விளக்கிட மனித அறிவு முயல்கிறது. கடவுளையும் பகுத்தறிவு என்னும் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடலாம் என சில வேளைகளில் மனிதர் நினைப்பதுண்டு. ஆனால் கடவுளின் வழிகள் மனித எதிர்பார்ப்புகளுக்கு அடங்கியோ , மனித கணிப்புகளுக்கு உட்பட்டோ அமைவதில்லை. எதிர்பாராதவற்றை நிகழ்த்த வல்லவர் கடவுள். தாம் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் தனி அன்பு காட்டினார் எனவும், பிற இனத்தாருக்கு அவர் தம்மை அதிசயமான விதத்தில் வெளிப்படுத்தவில்லை எனவும் இயேசுவின் சமகாலத்தவர் எண்ணினர். இயேசுவும் இஸ்ரயேல் பெற்றிருந்த தனிச்சலுகை பற்றிப் பேசுகிறார். என்றாலும், இஸ்ரயேலைச் சாராத கானானியப் பெண்ணுக்கும் கடவுளின் ஆசி இயேசு வழியாக வழங்கப்படுகிறது. அப்பெண் இஸ்ரயேல் குலத்தைச் சாராதவராக இருந்தபோதிலும் இயேசுவை மெசியாவாக அடையாளம் கண்டுகொள்கிறார். இயேசுவை அணுகி உதவி கேட்கிறார். முதலில் உதவி செய்யத் தயங்கிய இயேசு அப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பார்க்கிறார்; அவருடைய வேண்டலுக்கு இணங்கி அவருடைய மகளைக் குணப்படுத்துகின்றார்.

கடவுளை நம் குறுகிய அறிவுக்குள் கொண்டுவர இயலாது. திருச்சட்டமும் இறைவாக்கினரின் போதனையும் பிற இனத்தாருக்கு அளிக்கப்படவில்லை என்றாலும், அவர்களுக்குக் கடவுளின் அருட்கொடைகள் மறுக்கப்படுவதில்லை என்பது நல்ல செய்தியே. இயேசு வழங்கிய மீட்புச் செய்தியை உளமார ஏற்று, அவரில் நம்பிக்கை கொள்வதே முக்கியம். அப்போது அதிசயங்கள் நிகழும். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விதத்தில் கடவுளின் வல்லமை வெளிப்பட்டு மனிதருக்கு நலம் கொணரும். தனிமனிதரையும் சமூகத்தையும் ஆட்டிப் படைக்கின்ற தீய சக்திகளை முறியடித்து மீட்பு வழங்குகின்ற கடவுள் நம்மிடமிருந்து ''நம்பிக்கை''யை எதிர்பார்க்கிறார். உறுதியான நம்பிக்கை இருந்தால் எதிர்பாராத அதிசயங்கள் நிகழும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் வகுத்துக்கொண்ட குறுகிய எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்று, உம் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.